இதுவரை 40.. ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் சொல்லும் முக்கிய ஐடியா!
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ரூ.15 லட்சம் வரை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேதனையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின் நிகழும் 40வது தற்கொலை என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 162வது பிரிவை ப்யன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை அருகே ஆன்லைன் ரம்மியில் 15 லட்சம் வரை இழந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த சிவன்ராஜ் என்பவர் தொடர்ந்து பல நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறார்.
தொடர்ந்து தனது பணம் முழுவதையும் இழந்த அவர் பிறரிடம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும் சொத்துகளை விற்று வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்து ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். சுமார் பதினைந்து லட்சம் ரூபாய் வரை அவர் பணத்தை இழந்த நிலையில் விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து நேற்று ஒரு நாளில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதனை ஒரே நாளில் இழந்திருக்கிறார்.

இளைஞர்கள் தற்கொலை
இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது நண்பர்களை தொடர்பு கொண்ட சிவன் ராஜ் ஆன்லைன் ரம்மியால் மொத்த பணத்தையும் இழந்து விட்டதால் பணம் கேட்டு கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கருத்து
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நெல்லை மாவட்ட பனகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த சிவன்ராஜ் என்ற பட்டதாரி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 40வது தற்கொலை இதுவாகும்.

அடிமையாகும் இளைஞர்கள்
பட்டதாரி இளைஞர் சிவன்ராஜ் பெரும் பணத்தை இழந்த நிலையில், அவரது தந்தை, வீட்டு உடமைகளையும், கால்நடையையும் விற்றுக் கொடுத்த ரூ. 1 லட்சத்தையும் சூதாடி இழந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை எந்தளவுக்கு அடிமையாக்குகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. சிவன்ராஜை போன்று ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஆளுநருக்கு கண்டனம்
இந்த உண்மைகளை அறிந்தும் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் இனியும் தொடரக்கூடாது. எனவே, தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின் 162வது பிரிவை பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகளை தமிழ்நாடு அரசு ஆராய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தின் 162வது பிரிவு?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு பொருள் குறித்து சட்டசபையில் இயற்றப்பட்ட சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும்போது, அவசரம் கருதி அதே பொருள் குறித்து நிர்வாக ஆணை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு கூறுகிறது. அதனால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்து நிர்வாக ஆணை பிறப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications