தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு.. அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
சென்னை: தமிழகத்தில் தினசரியும் 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோய் விரைந்து பரவும் தன்மையுடையது. இதனால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மக்கள் சுயமாக சிகிச்சை எடுக்கக் கூடாது.
மெட்ராஸ் ஐ தீவிர பரவல்..உஷார்..எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்..மாணவர்களுக்கு கட்டாய லீவு தர உத்தரவு
மெட்ராஸ் ஐ
மெட்ராஸ் ஐ நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. யாருக்கும் இதுவரை கண்பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் தினந்தோறும் 4,500 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மெட்ராஸ் ஐ பாதித்ததால் குடும்ப நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கண் நோய்
கண் நோய் எனப்படும் மெட்ராஸ் ஐ பாதிப்பு இருந்தால் கண்கள் சிவந்து, எரிச்சலையும் உறுத்தலையும் கொடுக்கும். கண்களில் தண்ணீர் வரும். எனவே இந்த நோய் பாதித்தவர்கள் தாங்கள் பயன்படுத்திய உடமைகளை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. கண்களில் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டால் தாமாக மெடிக்கல் ஷாப் போய் சொட்டு மருந்து விட்டுக் கொள்ளுதல் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தொற்று வியாதி
கண் நோய் ஒரு தொற்று வியாதி என்பதால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் பயன்படுத்திய பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். வெறுங்கண்களால் யாரையும் பார்க்கக் கூடாது. கருப்பு கண்ணாடி அணிந்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
மழைக்காலம்
மழை காலம் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கண் வெண்படல அழற்சி எனப்படும் தொற்று நோய் பரவி வருகிறது. கண் விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகிறது. கண் நோய்க்கான அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் கூறியுள்ளதாவது: கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் வந்து கொண்டே இருக்கும், கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி மேல் இமையும் கீழ் இமையும் ஒட்டிக் கொள்ளும், வெளிச்சத்தை பார்த்தாலே கண் கூசும்.
அலட்சியம் வேண்டாம்
சென்னையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ அறிகுறியுடன் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகிறார்கள். இந்த நோய் காற்று மூலம் பரவுகிறது. இது 5 நாட்களில் குணமடையும். ஆனால் அலட்சியமாக இருந்து விட்டால் பார்வை பறிபோகவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.