சென்னை மாநகராட்சியின் ஆஃபர்! இன்றே சொத்து வரி கட்டினால் 5 சதவீதம் தள்ளுபடி! ரூ 5000 மிச்சம்!
சென்னை: சென்னை மாநகராட்சியில் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரையாண்டுக்கு தலா ரூ 850 கோடி என ஆண்டுக்கு ரூ 1700 கோடி வரி வருவாய் கிடைக்கும். மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளில் பொதுமக்களின் பங்களிப்புதான் சொத்து வரி. இந்த அரையாண்டுக்கான வரி ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு வசூலிக்கப்படுகிறது.

மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி, அக்டோபர் மாதம் 30ஆம் தேதிக்குள் 2-ஆவது அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்த வேண்டும்.
இந்த காலகட்டத்திற்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் சொத்து வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் ரூ 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதன் பிறகு செலுத்தப்படும் சொத்து வரிக்கு ஒரு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும் என்று மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை வசூலிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதோர் பட்டியலை https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வரை 5 சதவீதம் தள்ளுபடியில் ரூ 330 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications