விசாரணை கைதி விக்னேஷ் மரணம்! 6 காவலர்களை மே 20 வரை சிறையிலடைக்க உத்தரவு! நீதிமன்றம் அதிரடி
சென்னை: விசாரணை கைது விக்னேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 6 காவலர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷும் அவரது நண்பரும் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி, வாகன சோதனை செய்துள்ளனர்,
அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறியதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் சோதனை செய்துள்ளனர்,

உயிரிழப்பு
அப்போது அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் முதற்கட்டமாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை
இருப்பினும், விக்னேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டுக் காவல் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள அதிமுக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டு வந்தது. டிஜிபி சைலேந்திபாபு உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கொலை வழக்கு
விக்னேஷ் உடற்கூராய்வு முடிவுகளின்படி, அவருடைய உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும் இதனடிப்படையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மரணம் நடந்த காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், 9 காவலர்களை விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பியது.

6 பேர் கைது
அதன்படி 9 காவலர்களிடம் நேற்று (மே 6) காலை தொடங்கிய விசாரணை 10 மணி நேரத்திற்கு மேலாக நீட்டித்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், முதலில் காவல் நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை மேலும் தொடர்ந்த நிலையில், தலைமைக் காவலர் குமார், ஊர்காவல் படை வீரர் தீபம் மற்றும் 2 ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 6 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற காவல்
இதையடுத்து இந்த கொலை வழக்கில் கைதான 6 காவலர்களையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 காவலர்களையும் வரும் மே 20ஆம் தேதி வரை சிறையிலடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications