டிவியில் மோடி.. ஏடிஎமில் மக்கள் -அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே! பணமதிப்பிழப்பை மறக்க முடியுமா?
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இன்றோடு 6 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த அறிவிப்பு வெளியான தினத்தில் அரங்கேறிய சம்பவங்கள், மக்களின் நிலையை அலசுவோம்.
2016 ஆம் ஆண்டு.. நவம்பர் 8 ஆம் தேதி.. இரவு 8 மணி.. திடீரென தொலைக்காட்சி முன் தோன்றினார், 2 ஆண்டுகளுக்கு முன் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி. நாட்டு மக்கள் அனைவரும் தொலைக்காட்சியையே உற்று நோக்கிக் கொண்டு இருந்தனர்.
அந்த தருணத்தை இந்தியர்கள் யாராலும் இன்றளவும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அப்போது இந்தியாவின் பொருளாதாரத்தையும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போடும் அறிவிப்பு வெளியானது.
குஜராத் தேர்தல்:எனக்கு A ஃபார் ஆதிவாசிதான்-பழங்குடி ஓட்டுகளை டார்கெட் செய்து பிரதமர் மோடி பிரசாரம்!
அதிர்ச்சி
அன்றைய தினம் தினக்கூலி வேலைக்கு சென்றுவிட்டு சம்பளம் பெற்றுக்கொண்டு மளிகை கடையில் பொருட்களை வாங்க ரூ.500 ஐ எடுத்து நீட்டியவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. மதுரையில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பேருந்தில் ஏறி அமர்ந்து பேருந்து நடத்துனரிடம் பணத்தை நீட்டியவர்களுக்கும் அதே அதிர்ச்சி.
மக்கள் நிலை
அந்த நாள் மாலை ஏடிஎம்-இல் சம்பளத்தை எடுத்து வந்து வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை நீட்டியவருக்கும் அதே அதிர்ச்சி. தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல டாக்சியை தொடர்புகொண்ட மகளுக்கும் இதே அதிர்ச்சி.
அந்த நாள்
மகளின் திருமணத்துக்காக வட்டிக்கு பணம் வாங்கி வந்து மண்டபத்தில் அட்வான்ஸ் கொடுக்க சென்ற ஏழை தாய்க்கும் அதே அதிர்ச்சி. இப்படி பல தரப்பட்ட மக்கள் அதிர்ச்சியடைய காரணம் பணத்தை பெறும் இடத்தில் இருந்த கடை உரிமையாளர், நடத்துனர், வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து அந்த வாக்கியம்.
செல்லாத பணம்
"500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாம போச்சே உங்களுக்கு தெரியாதா? போய் டிவி பாருங்க" என அனைவரும் ஒரே விசயத்தை கூறினர். ஆனால், அதே 500 ரூபாயை நீட்டிதான் தனது வீட்டில் துண்டிக்கப்பட்ட கேபிள் இணைப்பை மீண்டும் கொடுக்க நினைத்தார் எந்த ஏழை என்பது டிவி பார்க்க சொன்னவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஏடிஎம் மையங்கள்
பணம் செல்லாததால் ஏமாற்றத்தோடு பயணத்தை ரத்து செய்துவிட்டு, மளிகை பொருட்கள் வாங்காமல், திருமணத்துக்கு அட்வான்ஸ் கொடுக்காமல் வீடு திரும்பிக் கொண்டு இருந்தவர்கள் கண்ட காட்சியை ஒவ்வொரு இந்தியரும் இன்று வரை மறந்திருக்க முடியாது. செல்லும் வழியெல்லாம் ஏடிஎம் மையங்கள் அலைமோதியது மக்கள் கூட்டம்.
பிரதமர் மோடி நடவடிக்கை
நாட்டில் என்னதான் ஆச்சு என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது கள்ளநோட்டு, கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார் என்று. ஒருபக்கம் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி ட்விட்டரில் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பதிவுகளை பறக்க விட்டுக்கொண்டு இருக்க மறுபக்கம் ஏழை, நடுத்தர மக்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதுக் கொண்டிருந்தனர்.
மக்கள் கதறல்
வீடு கட்ட வாங்கிய கடன், திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த பணம், ஏடிஎம் இல் எடுத்த சம்பள பணம், மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்து வைத்திருந்த பணம் என எல்லாம் செல்லாமல் போய்விட்டதே என்று எண்ணி குமுறினர். பல வீடுகளில் ஒப்பாறி சத்தங்கள் ஒலித்தன.
ரூ.2,000 பணம்
வங்கிக்கணக்கில் இருக்கும் நமது பணத்தை எடுக்கவே கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வீட்டில் இருந்து புறப்பட்டு தினசரி ஏடிஎம் மையங்களுக்கு சென்று கூட்டத்தில் நின்று ரூ.2,000 பணம் எடுத்துவிட்டு பணிக்கு செல்வது மக்களின் அன்றாட வேலையாக மாறியது. ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லாததால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
உயிரிழப்புகள்
வங்கி ஊழியர்கள் சாப்பிடவுடம், பாத்ரூம் செல்லவும் கூட நேரமின்றி பணியாற்றிக்கொண்டு இருந்தனர். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பிலும், பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற ஏடிஎம், வங்கி வாசல்களிலும் நின்று உயிர்விட்டவர்கள் ஏராளம். ஏடிஎம் வாசலில் நின்றவர் மரணம் என்ற செய்திகள் ஊடகங்களில் வருவது வாடிக்கையாக மாறியது.
கட்டுக்கட்டாக பணம்
எரியும் வீட்டில் எடுத்தது எல்லாம் லாபம் என்பதைபோல் குறுக்கு வழியில் 10% - 30% வரை கமிஷன் வைத்து பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொடுக்க கும்பல் கிளம்பியது. ஒரே ஒரு 2,000 ரூபாய் நோட்டுக்காக மக்கள் கால் கடுக்க வங்கிகள், ஏடிஎம்களில் காத்துக்கிடந்து உயிர்விட, மறுபக்கம் பல முக்கிய புள்ளிகள், பணக்காரர்கள் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
தொழில் பாதிப்பு
பிச்சைக்காரன் படத்தில் வரும் வசனத்தை சிலாகித்து பாராட்டிய மக்கள் பலர், அது நிஜத்தில் நடந்தால் எத்தகைய ஆபத்து நேரிடும் என்பதை அப்போது உணர்ந்தனர். நாட்கள் உருண்டோடின. மக்கள் செலவு செய்வது குறையத் தொடங்கியது. பல சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. பொருளாதாரமும் சரியத் தொடங்கியது.
99% பணம்
சிவாஜி படத்தைபோல் பல்லாயிரம் கோடி கருப்புப் பணத்தை கட்டுக்கட்டாக வீடுகள், அலுவலகங்களில் பதுக்கி வைத்துள்ளார்கள் என்று நினைத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் 99% பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வங்கிகளுக்கு வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரூ.15.41 லட்சம் கோடி பணம் வங்கிகளுக்கு வந்த நிலையில் அதில் ரூ.15.31 லட்சம் கோடி செல்லும் பணம் என அறிவிக்கப்பட்டது.
தொடரும் பிரச்சனை
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு வழங்கிய அவகாசம் முடிந்தது. அதன் பின்னர் பல வீடுகளில் மாற்றப்படாமல் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்கள் அடுத்தடுத்து கிடைத்தன. எப்படியாவது இதை மாற்றித்தாருங்கள் என ஏழைகள் வங்கிகளுக்கு ஏறி இறங்கினர். எதுவும் நடக்காமல் பரிதவித்து நின்றனர். இன்றும் கள்ளநோட்டுக்கள் பறிமுதல், கருப்பு பண பதுக்கல் என்பன போன்ற செய்திகள் அதிகரிக்க செய்துள்ளன.
வாபஸ் பெற்ற பிரபலங்கள்
தொடக்கத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டிய பிரபலங்களே பின்னர் அதை வாபஸ் பெற்று மத்திய அரசை விமர்சிக்க தொடங்கினார்கள். அன்று தொலைக்காட்சிகளில் ஓடத் தொடங்கிய பிரேக்கிங் செய்திகள் இன்று வரை ஓயாமல் தொடர்கின்றன. மக்களும் வாழ்க்கைக்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இன்றோடு பண மதிப்பிழப்பின் வயது ஆறு. அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்கப்போவது யாரு?