மு.க.ஸ்டாலின் 68-வது பிறந்தநாள்... அவரை பற்றிய 68 தகவல்கள்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68-வது பிறந்தநாளை மிக எளிமையான முறையில் எவ்வித பகட்டுக்கும் இடம்தராமல் இன்று கொண்டாடியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளதால் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை இந்தாண்டு ஸ்டாலின் தவிர்த்துவிட்டார்.
இதனிடையே மு.க.ஸ்டாலினின் 68-வது வயதை குறிக்கும் வகையில் அவரை பற்றிய 68 தகவல்களை இப்போது பார்க்கலாம்;
1) கருணாநிதியின் பிள்ளைகளில் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே விவரம் தெரிந்த நாட்கள் முதல் அரசியலில் அதீத ஈடுபாடு ஏற்பட்டது.
2) பள்ளிபடிக்கும் போதே தனக்கென ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி திமுகவுக்காக சென்னை தெருக்களில் பரப்புரை மேற்கொண்டார்.
3) பொதுப்பணித்துறை அமைச்சர் மகன் என்பதே தெரியாத அளவுக்கு பள்ளியில் எந்த பகட்டும் காட்டாமல் பாந்தமாக நடந்து கொண்டார்.
4) கருணாநிதி அழைக்காமலேயே அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தவர்.
5) திமுகவுக்காக ஊர் ஊராக சென்று உதயசூரியன் என்ற பெயரில் நாடகம் நடத்தி பிரச்சாரம் செய்தார்.
6) திருமணம் முடித்த 6 மாதங்களில் மிசா சிறைவாசியானார்.
7) தாம் பகுத்தறிவுவாதியாக திகழ்ந்தாலும் மனைவி கோவிலுக்கு செல்வதற்கு தனிமனித சுதந்திரம் வழங்கியவர் ஸ்டாலின்.
8) சென்னை மேயராக வருவதற்கு முன்பு தனது காரை தாமே ஓட்டினார்.
9) எப்போதும் கூச்ச சுபாவம் உடைய ஸ்டாலின், மேயராகிய பின்பு தான் கூச்சத்தை நீக்கி பொதுவிடங்களில் பேசக் கற்றுக்கொண்டார்.
10) மேயராக இருந்த காலத்தில் அதிகாலையிலேயே சென்னையை ஒரு ரவுண்டு அடித்துவிடுவார்.
11) ஸ்டாலின் மேயராக இருந்தபோது அவரது செயல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறினர்.
12) கட்சியில் இளைஞரணியை உயிர்ப்புடன் வைத்திருந்து திமுகவின் பிரதான அணியாக கொண்டு வந்தார்.
13) ஸ்டாலினை பொறுத்தவரை பயணம் செல்வதற்கு துளியும் சலிக்காத குணம் உடையவர்.
14) செயல் தலைவர் பதவியேற்பதற்கு முன்பு வரை வாரத்தில் 3 நாட்கள் வெளியூர் சுற்றுப்பயணங்கள் செல்வார்.
15) அரசியலுக்கு வந்தநாள் முதல் இன்றுவரை கட்சி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து பேசாத நாட்களே இல்லை.
16)துணை முதல்வராக இருந்த காலத்தில் தினமும் காலை ஒரு மணி நேரம் பொதுமக்களை சந்தித்துவிட்டு தான் கோட்டைக்கு புறப்படுவார்.
17) துணை முதல்வராக இருந்த போது கோப்புகள் பார்ப்பது உள்ளிட்ட பணி நிமித்தம் காரணமாக 4 மணி நேரம் மட்டுமே உறங்கினார் ஸ்டாலின்.
18)கட்சி நிர்வாகிகள் மரணம் அடைந்தால், அந்த மாவட்டத்திற்கு செல்லும் போது இறந்தவரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறுவார்.
19) வெளியூர் செல்லும் போது ஹோட்டல் உணவுகளை பெரும்பாலும் தவிர்த்து, நிர்வாகிகள் இல்லங்களில் இருந்து வரும் உணவுகளையே சாப்பிடுவார்.
20) விமான பயணத்தை தவிர்த்து, ரயில் மற்றும் காரில் தரைவழி பயணத்தை அதிகம் விரும்புவர்.
21) இளைஞரணி செயலாளராக இருந்தபோது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பயணித்து கட்சி கொடி ஏற்றினார்.
22) இளைஞரணிக்கு என வெள்ளை பேண்ட் வெள்ளை சர்ட் என்ற சீருடை முறையை கொண்டுவந்தார்.
23) வி.பி.சிங் பிரதமராக இருந்த போது ஸ்டாலினின் கட்சி செயல்பாட்டையும், ஆர்வத்தையும் பாராட்டியுள்ளார்.
24)அமெரிக்கா, துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்.
25) தற்போதும் கோடை காலம் வந்துவிட்டால் தனது பேரன், பேத்திகளோடு குறைந்தபட்சம் 3 நாட்களாவது சுற்றுலா சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவார்.
26) அரசியலில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டிற்கு சென்றுவிட்டால் பேரன், பேத்திகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் கொஞ்சி விளையாடுவார்.
27) உதயநிதி ஸ்டாலின் காதல் திருமணத்தை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு நடத்தி வைத்தார்.
28) மகன், மகள் மீது பாசம் வைத்திருப்பதை போலவே மருமகள் கிருத்திகா மீதும், மருமகன் சபரீசன் மீதும் ஸ்டாலின் அதிகம் பாசம் காட்டுவார்.
29) தனது பேரன் பேத்திகளுக்கு தமிழ் பெயர் சூட்டியுள்ளதோடு கட்சி நிர்வாகிகளிடமும் தமிழ் பெயர் சூட்ட வலியுறுத்துவார்.
30) தலைவர் மகனாக இருந்தாலும் கட்சியில் சீனியர்களுக்கு உரியமரியாதை அளிப்பதை கடைபிடித்து வருகிறார்.
31) மு.க.ஸ்டாலின் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர். தொடக்ககாலத்தில் அவரை அழைத்து சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் ஸ்டாலின்.
32) உணவை பொறுத்தவரை ருசிக்கு சாப்பிடுவதை விட பசிக்கு சாப்பிடக்கூடியவர்.
33) டைனிங் டேபிளில் பசியோடு அமர்ந்து பசியோடு எழுந்துவிடுவேன் என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார்.
34) சென்னையில் இருந்தாலும், வெளியூர்களுக்கு சென்றாலும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கமாட்டார்.
35) திமுக தலைவராவதற்கு முன்பு வரை ம.சுப்பிரமணி, அசன் முகமது ஜின்னா, உள்ளிட்டோருடன் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வார்.
36) நவீன காலத்திற்கேற்ப பேஸ்புக், ட்வீட்டர், உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இயங்கி வருகிறார்.
37) தொடக்கத்தில் கொஞ்சம் முன் கோபம் கொண்டவராக திகழ்ந்த ஸ்டாலின் இப்போது பக்குவப்பட்ட முறையில் அரசியலை கையாள்கிறார்.
38) கருணாநிதியே தயங்கிய சில விவகாரங்களை கூட ஸ்டாலின் துணிந்து கையாள்வார்.
39) துணை முதல்வராக இருந்தபோது மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்து ஸ்டாலின் சுழல் நிதி கொடுத்தார்.
40) மேடையில் 3 மணி வரை நின்று அனைத்து பயனாளிகளுக்கும் தம் கைப்பட சுழல் நிதிக்காக காசோலையை வழங்கினார்.
41) தேர்தல் பிரச்சார காலங்களில் ஒரு மாதம் வரை கூட வீட்டுக்கு செல்லாமல் தொடர் சுற்றுப்பயணம் செய்வார்.
42) மிஸ்டர் கிளீன் இமேஜை விரும்புவர் ஸ்டாலின்.
43) இதனால் திகட்டலான நபர்களை, சர்ச்சைகுரிய நபர்களை தன் பக்கத்தில் அண்டவிடமாட்டார்.
44) எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர், என ஆட்சி நிர்வாகத்தில் படிபடியாக வளர்ந்தார்.
45) வட்ட பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என கட்சியில் படிபடியாக வளர்ந்தார்.
46)ஸ்டாலின் மேயராகும் வரை கோபாலபுரம் இல்லத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்.
47) ஒரு கட்டத்தை ஸ்டாலினை சந்திக்க அதிக பார்வையாளர்கள் வந்ததால் தனிவீட்டுக்கு குடி பெயர்ந்தார்.
48)ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
49) சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் குறிஞ்சிமலர் உள்ளிட்ட ஒன்றிரண்டு சீரியல்களிலும் ஸ்டாலின் நடித்தார்.
50) நிர்வாகிகள் யாரேனும் வம்பு வழக்கில் மாட்டிக்கொண்டால் முதலில் விசாரித்து நிர்வாகிகள் மீது தவறில்லை என்றால் மட்டுமே குரல்கொடுப்பார்.
51) மாறாக நிர்வாகிகள் செய்தது தவறு என தெரியவந்தால் சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்கிற ரீதியில் இருந்துகொள்வார்.
52)தனது அக்காவான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.
53) ஸ்டாலினுக்கும் -அழகிரிக்கும் ஒரு காலத்தில் இணைப்பு பாலமாக இருந்தவரும் இந்த முரசொலி செல்வம் தான்.
54) தனது அண்ணன் அழகிரி மீது ஸ்டாலினுக்கு பாசம் இருந்தாலும் அவரது போக்கும், செயல்பாடுகளும் பிடிக்காததால் விலகி இருந்து வருகிறார்.
55) கருணாநிதி வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஒராண்டாக ஒய்வு எடுத்த போது அவரை பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டார் ஸ்டாலின்.
56) சென்னையில் இருந்தால் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடல்நலன் பற்றி கேட்டறிந்தார்.
57) கருணாநிதி ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கிய காலத்தில் அவரது இடத்தை நிரப்பும் பெரும்பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஸ்டாலின்.
58) கூட்டணிக் கட்சி தலைவர்களை தனது தந்தை வழியில் அணுகத் தொடங்கினார்.
59) முன்கோபம், அவசரம், உள்ளிட்ட அனைத்தையும் தூக்கியெறிந்து பக்குவப்பட்ட முறையில் தற்போது அனைத்து விவகாரங்களையும் கையாள்கிறார்.
60) நேரெதிர் அரசியல் செய்யும் அதிமுகவினர் கூட ஸ்டாலினின் செயல்பாடுகளை வெளிப்படையாக பாராட்டவில்லை என்றாலும் தங்களுக்குள் பேசும் போது போற்றுகின்றனர்.
61) காரணம் ஸ்டாலின் நினைத்திருந்தால் என்ன விலை கொடுத்தேனும் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுத்திருக்க முடியும். ஆனால் குறுக்கு வழியை அவர் தேடவில்லை.
62) பாஜகவை தீவிரமாக எதிர்த்தாலும் அக்கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்து மறைந்து வாஜ்பாய் மீது ஸ்டாலின் தனிப்பெரும் மரியாதை வைத்திருந்தார்.
63) கடந்த 2016-ல் தமிழகம் அதுவரை பார்த்திராத ஸ்டாலினை பார்த்தது. பேண்ட் ஷர்ட் சகிதம் அவர் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
64) திமுக 9 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் கூட கட்சியையும், நிர்வாகிகளையும் துடிப்புடன் வழி நடத்திச் செல்கிறார்.
65)கருணாநிதியிடம் இருந்த அதே போராட்டக்குணத்தை இந்தி எதிர்ப்பு, சி ஏ ஏ எதிர்ப்பு விவகாரங்களில் ஸ்டாலினிடம் காண முடிகிறது.
66) தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சந்தித்த முதல் தேர்தலான 2019 மக்களவை தேர்தலில் திமுகவை வெற்றிபெற வைத்து இந்தியாவை திரும்பிபார்க்க வைத்தார்.
67) மத்திய அரசுக்கு எதிராக தமிழகப் பிரச்சனைகளை மையமாக வைத்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
68) இதனிடையே இம்மாதம் இறுதியில் மீண்டு மக்கள் சந்திப்பு பயணத்தை தமிழகம் தழுவிய அளவில் ஸ்டாலின் தொடங்கவுள்ளார்.