கீழ்ப்பாக்கம் பள்ளியில் மனநலம் பாதித்த 74 குழந்தைகளுக்கு கொரோனா.. ஆசிரியரால் பரவிய கொடுமை
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஆதரவற்றவர்கள் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பால விகார் என்ற இந்த பள்ளியில், 175 குழந்தைகள் படித்து வருகிறார்கள். மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இவர்களாகும்.
கொரோனா நோய் பரவி வருவதால் ஆன்லைன் மூலமாக பள்ளிகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வெளியில் இருந்து ஆசிரியர்களை வரவைத்து இங்கு வகுப்புகள் நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.
அவ்வாறு வருகை தந்த ஆசிரியர் மூலமாக குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் இங்கு பரிசோதனை நடத்திய போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. 74 குழந்தைகளுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகத்தினர் விசாரிக்க அந்த பள்ளிக்கு செல்ல முற்பட்டபோது , நோய்த்தொற்று இருப்பதால் இங்கே உள்ளே அனுமதிக்க முடியாது என்று வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இப்படியான ஒரு நிலையில் வெளியில் இருந்து ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்தி நோய்த்தொற்றை பரவ விட்டிருக்கும் பள்ளி நிர்வாகம் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் , அந்த குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.