'கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு.. பட்டா வழங்க முடியாது..' அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான 520 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்குப் பட்டா வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. இவர் அறநிலையத் துறை அமைச்சராகப் பதவியேற்றது முதலே பல முக்கிய முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார்.
கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி எனப் பல புதிய திட்டங்களை அமைச்சர் சேகர்பாபு அறிமுகப்படுத்தியுள்ளார்.

வடபழனி கோயில்
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "வடபழனியில் அமைந்துள்ள இந்த ஆதிமூலம் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. இதனை புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரூ 520 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
திமுக ஆட்சி பொறுப்பேற்று 55 நாட்களில் மட்டும் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் எனத் தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 520 கோடியாகும். அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகச் சிலர் குழுக்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

பட்டா தர முடியாது
அவர்களை வாடகைதாரர்களாக மாற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் இடங்களில் அமைந்திருந்திருக்கும் கடைகள் பற்றி மறுபரிசீலனை செய்து புதிதாக வாடகை நிர்ணயிக்கப்படும். கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்குப் பட்டா வழங்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக மீது விமர்சனம்
மேலும், அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த அதிமுக ஆட்சி எந்தவொரு செயல்பாடும் இல்லாமல் இருந்தது என்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையே ஒரு முக்கிய சாட்சி என்றும் அவர் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications