8 கோடி மக்களும் வாழ்த்த வேண்டும்.. எல்லோரும் சேர்ந்து செயல்படுவோம்..முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
20 மாதங்கள் கடந்து விட்டது. 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்து விட்டது என கூற வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: அரசின் திட்டங்கள் அனைத்தையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டிற்குள் அனைத்து திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்து விட்டது என்று அனைவரும் கூறும் வகையில் சேர்ந்து செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 8 கோடி மக்களும் நமது அரசை வாழ்த்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசத்து வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். கூட்டத்தில், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் முதல்வர் ஸ்டாலின் எடுத்துக்கூறினார்.
ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணடைந்துள்ளனர். பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நம்மை வாழ்த்திக்கொண்டிருக்கின்றனர். இலவச மின் இணைப்பு பெறும் விவசாயிகள் பாராட்டி வருகின்றனர். அதே போல மாதந்தோறும் 1000 ரூபாய் பெறும் மாணவிகள் பாராட்டி வருகின்றனர். இவை அனைத்துமே நம்முடைய கண்ணுக்கு முன்னால் தெரியக்கூடிய மகிழ்ச்சிகள்.
இதே போல அனைத்து திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரும் போது 8 கோடி மக்களாலும் பாராட்டப்படும் அரசாக இந்த அரசு உயர்ந்து விடும். இது உங்கள் கைகளில்தான் உள்ளது. அறிவிக்கப்பட்ட செயல் திட்டங்கள் எப்படி பயன்பாட்டுக்கு வருகிறது என்று பார்க்க வேண்டும். அதில் சுணக்கம் வந்தால் எதனால் வருகிறது? அந்த திட்டத்தை முடிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒரு திட்டத்திற்கு எங்காவது சிறு தடங்கல் இருக்கலாம். அந்த தடங்கல் உங்களுக்குத்தான் தெரியும். நிதி துறையில் இருந்து ஏதாவது உத்தரவு வரவேண்டியிருக்கலாம். அதிகாரிகள் மட்டத்தில் கூட்டத்தை கூட்டி அதை உடனடியாக செயல்பட வைக்க வேண்டும். அனைத்து திட்டங்களும் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பார்க்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும்.
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் விரைவில் திறக்கப்படப்போகிறது. அதேபோல சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் மிகப்பெரிய மருத்துவமனை விரைவில் திறக்கப்பட போகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். 20 மாதங்கள் கடந்து விட்டது. தடைகள் இல்லாமல் 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்து விட்டது என கூற வேண்டும். சேர்ந்து செயல்படுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications