சென்னையில் வானகரத்தில் நள்ளிரவில் பற்றிய தீ; கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் நாசம்
சென்னை: சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் பிளைவுட் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டுள்ளது.
Recommended Video
வானகரம் பகுதியில் மிஸ்டர் கோல்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுள் குடோன் மற்றும் மற்றும் அருகில் இருந்த குடோன்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு, மதுரவாயல் பகுதி தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வாகனங்கள் பற்றி எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றன.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் பகுதியில் பிளைவுட் கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியுள்ளது. இந்த விபத்தால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. இதன் அருகில், பிளைவுட், டைல்ஸ் உள்ளிட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு, இந்த எண்ணெய் கிடங்கில் தீ பற்றியுள்ளது. இந்த தீ அருகில் இருந்த பிளைவுட் கடைக்கு பரவியுள்ளது. இந்த கடையில் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான மர கதவு, இதர மர பொருட்கள் செய்து தருவதற்காக பிளைவுட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் எண்ணெய் கடையிலிருந்து பரவிய தீ, இந்த மர பொருட்களை பற்றியுள்ளது. இரவு பற்றிய இந்த தீ விடிய விடிய எரிந்துக்கொண்டிருக்கிறது.
தீயை அணைக்க கோயம்பேடு, மதுரவாயல் பகுதி தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள் நீண்ட நேரமாக தீயுடன் போராடி வருகின்றனர். தீயுடன் கரும் புகையும் மேலெழுந்துள்ளதால், இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முதற்கட்டமாக தீ மற்ற கடைகள் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பிளைவுட் கடையில் பற்றிய தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக பிளைவுட் கடை நிறுவனர் கூறியுள்ளார். ஆனால் தீ இரவு நேரத்தில் பற்றியது என்பதால் இந்த கடைகளில் ஆட்கள் இருந்திருக்கவில்லை. இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்புத்துறை கூறியுள்ளது. எண்ணெய் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.
சாலையில் தீ பற்றி எரிந்த கார்! அதிர்ஷ்டவசமாக மகனுடன் உயிர் தப்பிய ராசிபுரம் தாசில்தார்!