கொடநாடு விவகாரம்.. உள்துறை இலாகாவிலிருந்து எடப்பாடி விலக வேண்டும்- ஆ.ராசா
சென்னை: கொடநாடு கொள்ளை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உள்துறை இலாகாவில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ ராசா கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில் கொடநாடு பங்களாவில் 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்டுள்ளது, சமீபத்தில் வெளியான அந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தமுடைய சயன் என்பவரின் பேட்டி வெளிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமிழக முதல்வர் மனு அளிப்பேன் என தெரிவித்துள்ளதாகவும் அவ்வாறு தமிழக முதல்வர் மனு அளிக்கும் பட்சத்தில் அதன் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த விசாரணை சரியான முறையில் நடத்தப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நீதிமன்றத்தை அணுகலாம் அல்லது இதை எவ்வாறு சட்ட ரீதியாக அணுகுவது என்பது குறித்து திமுக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.
மேலும் அடுத்தடுத்து பல்வேறு தற்கொலை மற்றும் விபத்து சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அந்த தற்கொலை மற்றும் விபத்து சம்பவங்கள் மற்றும் கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து சரியான விசாரணை நடத்த வேண்டும்.
ஏற்கெனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு புதியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அது குறித்து தனி விசாரணை நடத்தி அதற்கு தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் இந்த வழக்கின் போக்கையும் இந்த சம்பவங்களையும் பார்க்கும்போது இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட தூண்டியதாக கூறப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் முதல் குற்றவாளி. எனவே அவர் வகிக்கும் அந்த உள்துறை இலாகாவை வேறு யாருக்காவது மாற்றி கொடுக்க வேண்டும்.
மேலும் இந்த வழக்கு முடியும் வரை திமுக இதனை கூர்ந்து கவனிக்கும். தேவைப்படும் நேரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை திமுக எடுக்கும் என ஆ.ராசா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications