காவல்துறை மூலம் கோழைத்தனமாக என் மீது வழக்கு... முதலமைச்சர் மீது கடுகடுக்கும் ஆ.ராசா..!
சென்னை: காவல்துறை மூலம் கோழைத்தனமாக தன் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை ஜெயலலிதா மீதான உச்சநீதிமன்ற கண்டனங்களை நீதிமன்றம் மூலம் நிரூபிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
போலீஸ் வழக்கு
அண்மையில் 2ஜி வழக்கு குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆதாரமற்ற தான்தோன்றி தனமான அவதூறுகளை என்மீது சுமத்தியதை தொடர்ந்து, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்றும், அவர் ஊழல் செய்து அடித்த கொள்ளை அரசியல் சட்டத்தின் மீது அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை சிதைத்தது மட்டுமன்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆதாரத்தோடு நான் பேசியதை, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153 மற்றும் 505ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் தமிழக காவல்துறை என்மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
கோழைத்தனம்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் குறித்து நான் முதல்வருக்கு எழுதிய திறந்த மடலில் உள்ள எந்த கருத்தையும், வார்த்தையையும் பொய் என்றோ, புனைவு என்றோ மெய்ப்பிக்க வக்கற்ற முதலமைச்சர், தமிழக காவல்துறை மூலம் கோழைத்தனமாக இவ்வழக்கை என்மீது தொடுத்துள்ளார்.
உண்மை தெரியவரும்
தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள இவ்வழக்கின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமேயானால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய கண்டன கருத்துக்களை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்ற அந்த அடிப்படையில் இவ்வழக்கை வரவேற்று, முதலமைச்சருக்கும், தமிழக காவல்துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆ.ராசா எச்சரிக்கை
இத்தகைய வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என்றோ, என் சட்டப்படியான வாதங்களை தடுக்கலாம் என்றோ, முதலமைச்சர் நினைத்தால் அதைவிட அரசியல் அறியாமை ஏதும் இருக்க முடியாது. என்மீது போடப்படும் வழக்கை பயன்படுத்தியே ஜெயலலிதா செய்த ஊழலையும், இந்த அரசையும் தோலுரித்து காட்டுவதோடு விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில், அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.