சட்டசபையில் திறக்கப்பட்டது கருணாநிதி உருவப்படம்.. கீழே எழுதப்பட்ட வரிகள்தான் ஹைலைட்டே.. பிரமாதம்!
சென்னை: தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் இன்று திறந்துவைக்கப்பட்டது . குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உருவ படத்தை இன்று திறந்து வைத்தார்.
Recommended Video
இதையொட்டி மாலை 5 மணிக்கு சட்ட சபைக்கு வருகை தந்த ராம்நாத் கோவிந்த்திற்கு, புத்தகம், சால்வை அணிவித்து முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார்.
முன்னதாக, இந்த விழாவுக்கான வரவேற்புரை சபாநாயகரால் நிகழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கருணாநிதி உருவப்படம் பொத்தானை அழுத்தி வைப்பதன் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா துவக்கம்.. கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர்
மேஜையை தட்டி ஆரவாரம்
அப்போது அங்கே குழுமியிருந்த சட்டசபை உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர் . கருணாநிதியின் பிரம்மாண்ட உருவப்படத்துக்கு கீழே, "காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது" என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. இது கருணாநிதியால் அவ்வப்போது கூறப்படும் வாசகம் ஆகும்.
அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம்
தனது வாழ்நாள் முழுக்க கண்ணயராது தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தவர் கருணாநிதி. குறிப்பாக, காலை 4 மணிக்கெல்லாம் தினந்தோறும் எழுந்திருக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. இரவு சுமார் 5 மணி நேரம் மட்டும் தான் அவர் தினமும் தூங்கினார். எனவேதான் அரசியல் மட்டுமில்லாமல் தமிழ் இலக்கியம், நாடகம் , திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடிந்தது. முத்திரை பதிக்க முடிந்தது.
ஒவ்வொரு நிமிடத்தையும் பொன்போல கருதக் கூடியவர்
உடல் நோய்வாய்ப்பட்டு மரணம் அடையும் தருவாய்க்கு முன்புவரை அவர் தொடர்ந்து துரிதமாக இயங்கிக் கொண்டே இருந்தார் . ஒவ்வொரு நிமிடத்தையும் பொன்போல பார்க்கக் கூடியவர் கருணாநிதி. தொலைக்காட்சி பிரபலமான கோபிநாத் ஒரு முறையை கருணாநிதியை பேட்டி காணும் போது உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை பணிகள் செய்வதற்கு கால நேரம் கிடைக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி.. இருக்கும் நேரத்தை வீணாக்காமல் உரிய வகையில் பயன்படுத்துகிறேன் அதுதான் எனது வெற்றிக்கு காரணம் என்று பதில் சொன்னார்.
வாழ்க்கையே உதாரணம்
எனவே காலம் பொன் போன்றது என்ற வார்த்தைக்கு அவரது வாழ்க்கை ஒரு இலக்கணமாக இருந்தது. அடுத்த வரி, கடமை கண் போன்றது என்பதற்கும். கடமையை செய்ததில், அவர் சமகால அரசியல் தலைவர்களில் ஒரு சரியான உதாரணம்.
கட்சி தலைவர்
தள்ளாத வயதிலும் தனது முதல்வர் பதவிக்கான கடமையை ஆற்ற அவர் தவறியதில்லை. அடுத்தடுத்து 2 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் கூட தங்கள் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் யாரும் அதிமுக பக்கம் போக விடாமல் ஒரு கட்சித் தலைவராகவும் சிறப்பாக கடமையாற்றியவர் கருணாநிதி.
கடமையே கண்ணாக இருந்த கருணாநிதி
சமூக நீதி, கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களில் தனது கடமையை அவர் என்றுமே விட்டுக் கொடுத்தது கிடையாது. எனவே கருணாநிதியின் உருவ படத்திற்கு கீழே , காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்ற வரிகள் இடம் பெற்றிருப்பது சாலப் பொருந்தும் என்று கட்சி வேறுபாடில்லாமல் அத்தனை தலைவர்களும் அழுத்தந்திருத்தமாக கூறுகிறார்கள்.