உதயநிதி ஸ்டாலினுடன் வலம் வரும் அமைச்சர்கள் படை! காரின் பின் இருக்கையில் யார் யார்?
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சரவையில் உள்ள ஒரு டீம் அவருடன் எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வருகிறது.
கருணாநிதி காரில் துரைமுருகன், எ.வ.வேலு இடம் பிடித்ததை போல், ஸ்டாலின் காரில் கே.என்.நேரு, பொன்முடி இடம்பிடித்ததை போல் அமைச்சர் உதயநிதி காரில் செந்தில்பாலாஜி, மூர்த்தி, சிவசங்கர், உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
நேற்று சென்னையில் உதயநிதி ஸ்டாலின் சென்ற இடங்களுக்கெல்லாம் அவருடன் இவர்கள் ஒன்றாகவே பயணித்தனர்.

கருணாநிதி ஸ்டைல்
கருணாநிதியை பொறுத்தவரை தனது காரில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எவ வேலு, ஆ.ராசா ஆகியோரை தனது பயணங்களின் போது உடன் வைத்துக்கொள்வார். அவர்களிடம் மனம் விட்டு பேசியபடி கட்சி நிகழ்வுகள் பற்றி விவாதித்தவாறு காரில் பயணிப்பார். இவர்களும் கருணாநிதியுடன் ஒன்றாக காரில் பயணிப்பது தங்கள் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் தங்களுக்கு கூடுதல் செல்வாக்கை ஏற்படுத்தும் என்பதற்காக போட்டிபோட்டிக் கொண்டு கருணாநிதியுடன் பயணிக்க காரின் பின் இருக்கையில் இடம் பிடிப்பார்கள்.

அமைச்சர் கே.என்.நேரு
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினும் தனது தந்தை பாணியில் மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளை பயணத்தின் போது தனது காரில் ஏற்றிக் கொள்வார். அந்த வகையில் மிகவும் ஆக்டிவாக இயங்கக் கூடிய அமைச்சர் கே.என்.நேரு, பொன்முடி, போன்றவர்கள் எல்லாம் தற்போது கூட முதல்வருடன் ஒன்றாக அவரது காரின் பின் இருக்கையில் அமர்ந்து பெரும்பாலும் பயணித்து வருகிறார்கள். இப்போது என்னவென்றால் அமைச்சர் உதயநிதியுடனும் அமைச்சரவையில் உள்ள ஒரு டீம் ஒன்றாக பயணிக்கத் தொடங்கியுள்ளது.

ஒன்றாக பயணம்
அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மூர்த்தி, சிவசங்கர், உள்ளிட்டோர் நேற்று உதயநிதி ஸ்டாலினுடன் ஒன்றாக பயணித்தனர். நேற்று சென்னையில் அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் இவர்களும் கூடவே சென்றார்கள். மேலும், தயாநிதி மாறனும் உதயநிதியுடன் இணைந்து பயணித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லம், பேராசிரியர் அன்பழகன் இல்லம், ராஜாத்தி அம்மாள் இல்லம், என அனைத்து இடங்களிலும் அமைச்சர் உதயநிதியுடன் இவர்களையும் காண முடிந்தது. தனது தாத்தா, தந்தை பாணியை உதயநிதியும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

வெளியூர் பயணங்கள்
அமைச்சராகிவிட்டதால் இனி அடிக்கடி உதயநிதி ஸ்டாலின் வெளியூர் சுற்றுப்பயணங்கள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் மாவட்டம், நகரம், கிராமம் என ஒரு இடம் விடாமல் பயணித்து தனது காலடி தடத்தை பதிப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications