"அரிய வகை முக சிதைவு நோய்.." கண்ணீர் விட்ட தான்யா.. இலவச சிகிச்சையளிக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை தன்யாவுக்கு உரிய அறுவை சிகிச்சையை சவிதா மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று குழந்தையின் நிலையை அறிந்து மற்ற உதவிகளையும் அரசின் சார்பில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்கியம். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் தான்யா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரியவகை முக சிதைவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளார். பிறகும் போது வழக்கம் போல அனைத்து குழந்தைகளையும் போலத்தான் இருந்துள்ளார் தான்யா.
தான்யாவின் முகத்தில் கரும்புள்ளி போன்று தோலில் தோன்றியுள்ளது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர்கள் கடந்த 2017ம் ஆண்டுமுதல் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை உட்பட 6க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நாடி தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அந்த பாதிப்பானது குறைந்த பாடில்லை. இதனால் தான்யாவின் பெற்றோரான ஸ்டீபன் ராஜ் சௌபாக்யா தம்பதியினர் தங்களது சக்திகளுக்கு மேலாக கடன் பெற்று செலவு செய்தும் மருத்துவம் பார்த்து வந்து நிலையில் எந்த பயனும் இல்லை.
நாட்கள் போக போக தான்யாவின் முகம் வலது கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைவு ஏற்பட தொடங்கியுள்ளது. இதனால் குழந்தையின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. உடன் பயிலும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களும் தான்யாவை அவருக்குள்ள குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக சிறுமிக்கு சிகிச்சை அளித்தும் பாதிப்பானது சரியாக வில்லை. இந்த நிலையில் முகம் அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் ஸ்டாலின் உதவி செய்ய வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தாய் சவுபாக்கியம், மகளுக்கு 3 வயது இருக்கும் போது கன்னத்தில் சிறு புள்ளி காணப்பட்டது. அது ரத்த கட்டு என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம். ஆனால் இன்று வரை குணமாகவில்லை. மருத்துவமனைக்கு சென்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பணம் அதிகமாக கேட்கின்றனர். அந்த அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை. மகளின் சிகிச்சைக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தாா்.
இந்த நிலையில் அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். முகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் காரணமாக அவர் பள்ளி படிப்பை முழுவதுமாக பாதித்துள்ளது. பள்ளியில் மாணவர்கள் தன்னுடன் அமர மறுக்கின்றனர், உணவு அருந்த விளையாட கூட வருவதில்லை' என மனமுடைந்து கூறும் தான்யா பள்ளியில் தான் தனிமையாகவே இருப்பதாகவும் இதன் காரணமாக பள்ளிக்கு செல்ல வெறுப்பாக உள்ளதாகவும் வேதனையுடன் கூறினார்.
சுதந்திர தினத்தன்று நடன போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்காமல் தனது பாதிப்பை காரணம் காட்டி அனைவரின் முன்னும் அவமானப்படுத்தி ஒதுக்கி விட்டதாக பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதன் காரணமாக பள்ளி படிப்பு தனக்கு வேண்டாம் எனவும் முகம் முழுவதுமாக குணமடைந்த பின்னரே பள்ளிக்கு செல்ல ஆசை உள்ளது எனவும் மனம் வேதனையை வெளிப்படுத்தினார்.
தந்தை ஸ்டீபன் ராஜ் மகளின் நிலையை அறிந்து வேதனை அடைந்துள்ளார். டைலர் ஆக பணிபுரிந்து வரும் தான் நிரந்தர பணி ஏதும் செய்யாமல் குழந்தையின் சிகிச்சைக்காக கிடைக்கும் வேலைகளை செய்து வருவதாக தெரிவிக்கின்றார். மேலும் குழந்தையை வீட்டில் விட்டு சென்றால் அக்கம் பக்கத்தினர் மிகவும் கடுமையான வார்த்தைகளால் வேதனைப்படுத்துவதாகவும் இவற்றை தன்னிடம் கூறிய மகள் அழும்போது மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ள தோன்றுவதாகவும் கண்ணீருடன் கூறினார். மேலும் குழந்தை இரவு நேரங்களில் அழுவதாகவும் தனது பாதிப்பை எண்ணி எண்ணி வருந்துவதாகும் மனமுடைந்து பேசும் தந்தை தனது தம்பியின் முகத்தைப் போன்று எப்பொழுது எனக்கு முகம் கிடைக்கும் எனவும் குமுறுவதாகும் தெரிவிக்கின்றார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தனது குழந்தையை அருகில் உள்ளவர்கள் ஏதோ பரவும் நோய் போல எண்ணி அருகில் வருவதற்கு அச்சம் தெரிவிக்கும் அவர்கள் குழந்தை அருகில் சென்றால் விரட்டுவதாகவும் தண்ணீர் எடுக்க சென்றால் அங்கு வரக்கூடாது என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.
இதுவரை குழந்தையின் மருத்துவ செலவுக்கு என்ன தனது வரவுக்கும் அதிகமாக கடன்களை பெற்று சுமார் 40 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக கூறும் அவர் உடனடியாக தமிழக அரசு தன் குழந்தை மீது கவனம் செலுத்தி உரிய மருத்துவ சிகிச்சை உதவிகளை அளித்து அனைவரை போல் சாதாரண வாழ்க்கை வாழ உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறுமியின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மருத்துவர் குழுவினர் நேரில் வந்து குழந்தையின் விவரங்களை சேகரித்து உடனடி மருத்துவ சிகிச்சைக்காக நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தன்யா என்ற பெண் குழந்தையின் மருத்துவ நிலையையும், முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு உதவி வேண்டி விடுத்த வேண்டுகோள் செய்தியும் கிடைத்தவுடன் அது குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டார்கள். அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை தன்யாவுக்கு உரிய அறுவை சிகிச்சையை சவிதா மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று குழந்தையின் நிலையை அறிந்து மற்ற உதவிகளையும் அரசின் சார்பில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
இந்த நோய்க்கான முழு சிகிச்சியையும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணமின்றி செய்வதற்கும் உத்திரவாதம் அளித்து இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தை தான்யா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.