அதிமுக தான் திமுக அரசை காப்பாத்தி இருக்கு.. கொளத்தூர் என்ன கன்னித்தீவா? - கொதித்த ஜெயக்குமார்!
சென்னை : சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே பல இடங்களில் மழைநீர் வடிந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால், திருவிக நகர், புளியந்தோப்பு, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மூலம், தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் சீரழிக்கப்பட்டதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகே பணிகள் வேகமாக நடைபெற்று வந்ததாகவும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

அதிமுக சீரழித்துவிட்டது
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிவடையாத இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, அமைச்சர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக சீரழித்துவிட்டது. அதிமுக சீரழித்ததை சரி செய்ய பல ஆண்டுகளாகும். ஆனால் திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 ஆண்டுகளில் செய்யாததை ஒரே ஆண்டில் செய்து சாதித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

அதிமுக மாஜி
இந்நிலையில் திருவிக நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று உணவு வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கூட திமுக அரசு வழங்கவில்லை. வெறும் இரண்டு நாள் பெய்த மழையையே திமுக அரசால் சரியாக கையாள முடியவில்லை. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி அதிமுகவினர் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

எங்கள் திட்டம்
மேலும், "எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மூன்று இடங்களில்தான் தண்ணீர் தேங்கியது. உடனே ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி 2400 கிலோ மீட்டருக்கு ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை போட்டோம். அத்திட்டத்தில் 1500 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகளை நாங்களே முடித்துவிட்டோம். மீதமுள்ள பணிகள் இரண்டாம் பாகத்தில் முடிக்கப்பட வேண்டிய விஷயம். எனில் இது யாருடைய திட்டம்? நிதி ஒதுக்கியது யார்? இதை திமுக அரசு வெளிப்படையாக சொல்ல முடியுமா?

திமுக அரசை காப்பாற்றியுள்ள அதிமுக
நாங்கள் போட்ட திட்டத்தைத் தான் இன்று நீங்கள் அமல்படுத்துகிறீர்கள். நாங்கள் செய்த திட்டத்தால் தான் இன்று தண்ணீர் வடிந்துள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையே இன்று திமுக அரசை காப்பாற்றியுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுகவின் இயலாமை காரணமாக மழை நீர் பல இடங்களில் தேங்கி நிற்கிறது.

கொளத்தூர் - குளமூர்
வாய்ச்சொல் வீரராக விளம்பர பிரியராக முதலமைச்சர் செயல்படுகிறார். கொளத்தூர் தொகுதிக்கு எந்த ஊடகமும் போகக்கூடாதா? கொளத்தூர் தொகுதி என்ன கன்னித்தீவா? கொளத்தூர் தொகுதி என்றே அதை சொல்லக்கூடாது. 'குளமூர்' என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. திமுக அரசின் பிடியில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜெயிலை பார்த்து எனக்கென்ன பயமா?
எங்கள் மேல் வழக்கு போட்டு சிறையில் தள்ளினால் நாங்கள் பயந்து விடுவோமா? தமிழகத்தில் உள்ள அத்தனை சிறைகளையும் பார்த்தவன் நான். அரசியல் போராட்டங்களில் நிறைய சிறைகளைப் பார்த்துள்ளேன். எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுவார்கள். பொய் வழக்குகள் போட்டு அதிமுகவை முடக்கி விடலாம் என நினைத்தால், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகத்தான் முடியும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications