எனக்கு காவி சாயம் பூச முயற்சி.. வள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி அதிரடி
தனக்கு காவி சாயம் பூச முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "எனக்கு பாஜக கலர் பூச முடியாது.. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இந்த காவிக்கு திருவள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் சிக்க மாட்டேன்" என்று திட்டவட்டமாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
2021 -ல் நடக்க போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் களம் காண போவதாக ரஜினி தெரிவித்திருந்தார். இதனால், வரும் 2021- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, ரஜினி ஆரம்பிக்க போகும் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகளும் எழுந்த வண்ணமே உள்ளது.
இதனிடையே, "ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் வரவேற்பேன். ஆனால், அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே என்விருப்பம்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
பாஜக
இதையடுத்து, இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது, ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது. இதுவும் ரஜினியை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சியாகவே கருதப்பட்டது. இந்த விருதுக்கு வாழ்த்து தெரிவிக்க பொன். ராதாகிருஷ்ணன் நேரில் சந்திக்க போகிறார், சந்தித்தார் என்றும் செய்திகள் பரவின.
சிலை திறப்பு
இந்த சமயத்தில்தான், ரஜினிகாந்த் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறப்பு விழா இன்று நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் சொன்னதாவது:
நாத்திகர் இல்லை
பாஜகவில் இணைவது குறித்து பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசவில்லை. அவர் என்னை அழைக்கவும் இல்லை. என்னை பாஜக தலைவர் என்பது போல நிறுவ முயற்சி நடக்கிறது. பாஜகவின் நிறத்தை எனக்கு பூச முயற்சி நடைபெறுகிறது. திருவள்ளுவர் பெரிய ஞானி சித்தர். கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர். திருவள்ளுவர் நாத்திகர் இல்லை.. அவர் ஆத்திகர்.. திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியலாக்குவது தேவையற்ற செயல். திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது, சர்ச்சையாக்குவது தேவையற்றது.
சிக்க மாட்டேன்
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இந்த காவிக்கு திருவள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் சிக்க மாட்டேன். பாஜக அலுவலகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு எல்லாம் காவி உடை அணிவிக்க கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியில்லை" என்று தெரிவித்துள்ளார்.