துபாய் டூ சென்னை.. சீக்ரெட்டா வந்த பிரபல நடிகர்.. நீங்களா தம்பி.. உடனே தட்டி தூக்கிய அதிகாரிகள்
சென்னை: கேரளாவை சேர்ந்த மலையாள நடிகர் ஷியாஸ் கரீம், துபாயில் இருந்து இன்று ரகசியமாக சென்னை வந்த நிலையில், பெண் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
எர்ணாகுளம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் ஷியாஸ் கரீம். 34 வயதான இவர் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். அங்கு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில பங்கேற்று வருகிறார். இவருக்கு கேரளாவின் படன்னாவைச் சேர்ந்த 32 வயதாகும் விவகாரத்தான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் உடற்பயிற்சியாளரான அந்த பெண் பாலியல் துன்புறுத்தல் மற்றும் திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஷியாஸ் கரீம் மீது சுமத்தி இருந்தார். இது தொடர்பாக கேரள காவல்துறையிடமும் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக பெண் ஜிம் பயிற்சியாளர் கேரள மாநிலத்தின் சந்திரா காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 'ஜிம் பயிற்சியாளராக உள்ளேன். எனக்கும் ஷியாஸ் கரீமுக்கும் ஜிம்மில் பழக்கம் ஏற்பட்டது. என்னிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி எர்ணாகுளம் மற்றும் மூணாறு லாட்ஜ்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து திருமண ஆசையை காட்டியே 2021 முதல் 2023 மார்ச் வரை என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்.
இதனிடையே ஷியாஸ் கரீம் வேறொரு திருமணத்திற்குத் தயாராவது எனக்கு தெரிந்தது. இதுபற்றி செருவத்தூரில் தங்கியிருந்த அவரிடம் கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் என்னை அப்போது தாக்கினார். என்னிடம் இருந்து சிறிது சிறிதாக மொத்தம் 11 லட்சம் ரூபாயை பறித்ததுடன், திருமண ஆசை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனறு கோரியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஷியாஸ் கரீம் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அவர் திடீரென துபாய்க்கு தப்பி சென்ற நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷியாஸ் கரீம் எப்போது நாடு திரும்பினாலும் கைது செய்யப்பபடலாம் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் நடிகர் ஷியாஸ் கரீம் இன்று துபாயில் இருந்து ரகசியமாக சென்னை வந்தார். அவரை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த போது, பாலியல் குற்றச்சாட்டில் தேடப்படும் குற்றவாளி என்பதை தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், கேரள காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் நேரில் வந்து ஷியாஸ் கரீமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எர்ணாகுளம் அழைத்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு விசாரணை நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக நடிகர் ஷியாஸ் கரீம், ஒருமுறை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தன்னை பற்றி பலர் பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து பதிவிட்டிருந்தார். மேலும் தான் துபாயில் உள்ளதாகவும், சிறையில் இல்லை என்றும் கூறியிருந்தார். அதன்பிறகே அவர் துபாயில் இருக்கும் விஷயம் கேரள போலீசுக்கு தெரியவந்தது. இந்நிலையில் ரகசியமாக சென்னை வந்து தற்போது ஷியாஸ் கரீம் சிக்கி உள்ளார்.இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications