டாக்டர் ஆகணும்.. 10 வருடம் முன் கேட்ட சிறுவன்.. சூர்யா செய்த உதவி.. மருத்துவரான கூலி தொழிலாளி மகன்!
சென்னை: நடிகர் சூர்யா மூலம் 10 வருடத்திற்கு முன் நிதி உதவி பெற்றுக்கொண்ட மாணவர் ஒருவர் தற்போது மருத்துவர் ஆகி இருக்கும் சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சூர்யா, சினிமா மட்டுமின்றி நிஜ உலகிலும் ஹீரோதான். தீவிரமான அரசியல் கருத்துக்களை பேசுவது , நாளிதழ்களில் கட்டுரை எழுதுவது, நேர்மையான விஷயங்களை வெளிப்படையாக பேசுவது என்று சூர்யா தனக்கு என்று தனி ஸ்டைலை வைத்து இருக்கிறார்.
சினிமா உலகில் இருந்து கொண்டு அகரம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மக்களுக்கு தீவிரமாக உதவி செய்து வருகிறார். அதிலும் ஏழை மக்களின் கல்விக்காக தீவிரமாக நிதி உதவிகளை செய்து வருகிறார்.

நிகழ்ச்சி
சூர்யா மூலம் உதவி பெற்றுக்கொண்ட பலர், வெவ்வேறு மேற்படிப்புகளில் படித்து முன்னேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் சூர்யா செய்த உதவி மூலம் கூலித் தொழிலாளி ஒருவரின் மகன் டாக்டரானது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 10 வருடம் முன் நிகழ்ந்த சம்பவம் ஆகும் இது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சார்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஆகும்.

உதவி நிகழ்ச்சி
ஏழை மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்கள். 10 வகுப்பு மாணவர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் குடும்ப சூழ்நிலையை குறிப்பிட்டனர். இதை கேட்கும் சூர்யா அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார். பொதுவாக இது போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் டிஆர்பிக்காக சித்தரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அந்த அகரம் நிகழ்ச்சி உண்மையில் ஏழை மாணவர்களை தேடி சென்று உதவியது.

உதவி கேட்டார்
இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்தான் நந்தகுமார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அரசு பள்ளி மாணவர். எல்லோரையும் போல இவரும் அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உதவி கேட்டு இருந்தார். நான் 12ம் வகுப்பு படித்துவிட்டேன். ஆனால் மேல்படிப்பு படிக்க காசு இல்லை என்று கூறினார்.

மார்க் என்ன
அதற்கு சூர்யா அந்த நிகழ்ச்சியில் உங்களின் மார்க் என்ன என்றது கேட்டார். நான் 1160 மார்க் எடுத்து இருக்கிறேன். மெடிக்கல் கட் ஆப் 199. ஆனால் மருத்துவம் படிக்க காசு இல்லை என்று கூறினார். தீவிரமாக படித்து இவ்வளவு மார்க் எடுத்தேன் என்றார்.

கேள்வி கேட்டார்
உடனே சூர்யா அவரிடம் உங்களின் குடும்ப சூழ்நிலை குறித்து விவரியுங்கள் என்று கேட்டார். அதற்கு நந்தகுமார் கண்ணீர் விட்டபடியே, என் அப்பா, அம்மா இருவரும் கூலி தொழிலாளிகள். வீட்டில் மின்சாரம் கூட இல்லை. தெரு விளக்கில்தான் படித்தேன். சத்துணவு சாப்பாடு மட்டும்தான் ஒரே சத்தான உணவு. படிப்புமட்டும்தான் எனக்கு ஒரே நம்பிக்கை.

சூர்யா கேள்வி
அதன்பின் சூர்யா, நந்தகுமாரின் அம்மாவிடம், அவரின் மகன் குறித்து கேட்டார். என் மகனுக்கு டாக்டர் ஆக ஆசை. ஆனால் எங்களுக்கு காசு இல்லை என்று கூறினார். நந்தகுமாரும், எனக்கு டாக்டர் ஆக ஆசை சார், என்று குறிப்பிட்டார். இதை கேட்டு உடைந்து போன சூர்யா, கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வேன். உங்கள் பையன் கண்டிப்பாக டாக்டருக்கு படிப்பான் என்று அந்த மேடையில் சூர்யா உறுதி அளித்து இருப்பார்.

சொன்னபடி செய்தார்
அதேபோல், நடிகர் சூர்யா அந்த வருடமே தான் சொன்னபடி, அந்த மாணவர் நந்தகுமாருக்கு உதவி செய்தார். அவரை சென்னை எம்எம்சி மருத்துவ கல்லூரியில் சேர அகரம் மூலம் நிதி உதவி அளித்தார். அவர் படித்து முடிக்கும் வரை அனைத்து வகையான கட்டணம் மற்றும் நிதி தேவைகளையும் சூர்யாவே ஏற்றுக்கொண்டார். தற்போது மருத்துவம் படித்துவிட்டு, பெரம்பலூரில் இவர் டாக்டராக இருக்கிறார்.

செம உதவி
ஆம் 10 வருடம் முன் கூலித்தொழிலாளியின் மகனாக இருந்த நந்தகுமார். தற்போது மருத்துவம் படித்துவிட்டு, மேல்படிப்பும் முடித்துவிட்டு, டிரைனிங் முடித்துவிட்டு மருத்துவராகி உள்ளார். சூர்யா அப்போது செய்த நிதி உதவி, ஒரு கனவுகள் நிறைந்த சிறுவனை மருத்துவராக்கி உள்ளது. நான் மருத்துவராக சூர்யாவையும், அகரமும்தான் காரணம் என்று நந்தகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications