#பனையூர்_பிரியாணி Vs #அடிமை_இயக்கம்! ட்ரெண்டான மோதல்! புஸ்ஸி ஆனந்தால் தளபதி விஜய்க்கு வந்த சிக்கல்!
சென்னை : தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் சந்திப்பில் பிரியாணி விருந்து வைத்து அசத்தினார் விஜய். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் விஜயின் ரசிகர்களை காலில் விழ வைத்ததாகவும், இது தொடர்பாக #அடிமைஇயக்கம் என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு வெளியாக உள்ளது.
இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
நடிகர் விஜய்
விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிப்பு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது. இந்தநிலையில், சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை விஜய் சந்தித்தார்.
பிரியாணி விருந்து
நாமக்கல், புதுக்கேட்டை, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும் ரசிகர்கள் அனைவருக்கும் கமகம பிரியாணி பரிமாறப்பட்டது. இதனால் குஷியான விஜய் ரசிகர்கள் #பனையூர்_பிரியாணி என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கினர். இது தொடர்பான புகைப்படங்களும் பரவலாக பகிரப்பட்டது.
புஸ்ஸி ஆனந்த்
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"மிக விரைவில் மற்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். வாரிசு படம் வெளியீடு குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். தேர்தல் தொடர்பான முடிவு குறித்து விஜய் உங்களிடம் சொல்வார். யார் எல்லாம் உண்மையாக மக்களுக்கு பணியாற்றுகிறார்களோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் சந்திக்கிறோம். ரசிகராக இருந்தாலும் அடிமட்ட தொண்டராக இருந்தாலும் அவர்களை சந்திப்பது தான் விஜய்யின் முதல் வேலை" என்றார்.
தொடர்ந்து சர்ச்சை
இந்த நிலையில் தான் அடுத்தடுத்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. ஏற்கன்வே இருந்த நிர்வாகிகளையும், நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரையே ஓரம் கட்டியதாக வதந்திகள் உண்டு. தற்போது நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் நியமனத்தையும் அவரே பார்த்து வருகிறார். இந்நிலையில் பனையூரில் நடிகர்க விஜய் - ரசிகர்கள் சந்திப்புக்கு வந்தவர்களை வாசலில் நின்று ஒவ்வொருவராக அடையாள அட்டையை பரிசோதித்து அனுமதித்தார்.
அடிமை இயக்கம்
அப்போது அங்கு வந்தவர்களை தனது காலில் விழச் சொன்னதாகவும் சிலரை தோள்பட்டையை பிடித்து அழுத்தி காலில் விழ வைத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியானது. நடிகர் விஜய்க்கு தான் அவர்கள் ரசிகர்களே தவிர புஸ்ஸி ஆனந்துக்கு இல்லை எனவும் அடிமை இயக்கம் என்ற ஹாஷ்டேக் அஜித் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதை அடுத்து விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது.
மறுப்பு
பனையூர் பிரியாணி என விஜய் ரசிகர்களும் அடிமை இயக்கம் என அஜித் ரசிகர்களும் மாறி மாறி சமூக வலைதளங்களில் சண்டையிட்டு கொண்டனர் இதனால் ட்விட்டர் இரண்டு நாட்களாக சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்களை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்தை நேரில் அழைத்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை ரசிகர்களே ஆர்வமாக புஸ்ஸி ஆனந்தின் கால்களில் விழுந்தார்கள், விஜய்யும் கண்டிக்கவில்லை என்கின்றனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.