வயதுக்கு தான் மரியாதை.. ட்விட்டரில் திடீரென டென்ஷனான நடிகை குஷ்பு.. கடும் விமர்சனம்.. என்னாச்சு?
சென்னை: சென்னை கலாஷேத்ரா பாலியல் புகார் தொடர்பான விவகாரத்தில் பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்புவை ஒருவர் கடும் சொற்களால் விமர்சித்தார். இதனால் கோபமடைந்த நடிகை குஷ்பு திரும்ப அட்டாக் செய்தார். இதனால் ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய கலாச்சாரத்துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சென்னையில் கலாஷேத்ரா ருக்மணிதேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக கலாஷேத்ரா விவகாரம் பூதாகரமானது.

புகாருக்கு மறுப்பு
இதற்கிடையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் மாணவி ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் தனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. தனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து பாலியல் புகார் தொடர்பான விசாரணையை தேசிய மகளிர் ஆணையம் கைவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மாணவிகள் போராட்டம்
இந்நிலையில் தான் தற்போது மாணவிகள் கல்லூரியில் போராட்டத்தை துவங்கி உள்ளனர். கல்லூரியில் 4 பேர் மீது பாலியல் தொடர்பான புகார்களை தெரிவித்தும், நடவடிக்கை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாநில மகளிர் ஆணையமும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ட்விட்டரில் குஷ்பு மீது விமர்சனம்
இந்நிலையில் ட்விட்டரில் ரத்தினவேலு வசந்தா என்ற பெயரில் செயல்படும் ஒருவர், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை டேக் செய்து, ‛‛இன்று வீட்டு கடனுக்கான வட்டி அதிகமாகியுள்ளது. கலாசேத்ராவில் பார்ப்பன ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவை எதிர்த்து மாணவிகள் போராடுகின்றனர். மகளிர் ஆணைய உறுப்பினர் ஆன நீங்கள் என்ன செய்கிறீர்கள்'' என கேள்வி எழுப்பியதோடு மேலும் சில வார்த்தைகளை காட்டமாக தெரிவித்து இருந்தார்.

குஷ்பு பதிலடி
இதற்கு உடனடியாக குஷ்பு பதிலடி கொடுத்தார். அதாவது, ‛‛நீங்கள் எவ்வளவு விரக்தியில் இருக்கிறீர்கள். முதல்வர் உங்களுக்கு ஏதாவது வேலை ஒதுக்கீடு செய்ய வண்டும். நீங்கள் கேள்விகள் கேட்பதற்கு முன்பு சட்டம் அல்லது தேசிய மகளிர் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் வயதுக்கு மரியாதை உண்டு. அதுவும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். dravidan Stockகளிடம் இருந்து சில சிறந்த உணர்வுகளை எதிர்பார்ப்பது என்பது என் மீதான தவறு தான். உங்களிடம் இருந்து சிலவற்றை கற்று கொள்ள வேண்டியுள்ளது. உங்களை போல் நானும் சொன்னால் அது அவமரியாதையாக இருக்கும். எனவே கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என கூறுகிறேன்'' என விமர்சனம் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications