அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்தால்.. தமிழர்கள் தன்னை ஏற்பார்கள் என மோடி நினைப்பது தப்பு: நடிகை ரோகிணி
சென்னை: மாரத்தான் போட்டிகளைத் தொடங்கி வைத்த நடிகை ரோகிணி, தமிழகத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கடி வந்து சென்றால் மட்டும் பத்தாது... தேவையான திட்டங்களை வழங்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.
இன்று மினி மாரத்தான் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதை நடிகை ரோகிணி தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டிகளில் பல்வேறு வயதானவர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்குப் பிறகு நடிகை ரோகிணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணங்கள் குறித்துப் பேசிய அவர், பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது மட்டுமின்றி, மாநிலத்திற்குத் தேவையான திட்டங்களையும் வழங்க வேண்டும் என்று விமர்சித்துப் பேசியுள்ளார்.
நடிகை ரோகிணி: செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோகிணி, "இந்த மாரத்தான் போட்டியில் அனைத்து வயதினரும் கலந்து கொண்டுள்ளனர். சிறு வயதினர் தொடங்கி 77 வயதான முதியவர்கள் வரை இந்த மாரத்தான் போட்டியில் ஆர்வமாகக் கலந்து கொண்டுள்ளனர்" என்றார்.
தொடர்ந்து லோக்சபா தேர்தல் குறித்துப் பேசிய அவர், "எப்போதும் போல எதிர்வரும் லோக்சபா தேர்தலில் நமது தோழர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்களோ.. அங்கெல்லாம் நான் பிரச்சாரம் செய்வேன். இது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் மட்டும் இல்லை. நாம் எப்போதும் சொல்லி வரும் விஷயம் தான்.. நாம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும். சமத்துவமின்மை இல்லாத சமூகத்தை நோக்கி நாம் செல்ல தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதையே தான் வலியுறுத்தப் போகிறோம்.
சும்மா வந்தால் மட்டும் பத்தாது: அடிக்கடி பிரதமர் தமிழ்நாட்டிற்குத் தான் வருகிறார். தமிழ்நாடு அவருக்குப் பிடித்துப் போய்விட்டது என நினைக்க வேண்டாம். அப்படி வந்தாலாவது தமிழர்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார். பிரதமர் பதவியில் இருக்கும் அவருக்கான அனைத்து மரியாதையையும் நாம் தருகிறோம். அதேநேரம் தமிழகத்திற்குத் தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்தால் நன்றாக இருக்கும். சும்மா வந்து பார்த்துவிட்டுப் போனால் மட்டும் பத்தாது.
யாராக இருந்தாலும் தாய் மொழி தான் முக்கியமானது என்று மனோதத்துவ மருத்துவர்கள் கூறுகிறார்கள். நாம் எந்தவொரு நிலையிலும் தாய் மொழியில் தான் பேசுவோம். எனவே, தாய் மொழியில் கற்பித்தல் நடந்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.. அனைவரும் தங்கள் தாய் மொழியை உயர்த்தி பிடித்தாலே அனைத்து மொழிகளுக்கான முக்கியத்துவம் கிடைக்கும்.
மாநில உரிமைகள் முக்கியம்: மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும். முதல்வர் தொடங்கி அனைவரும் இதையே தான் வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து பிரச்சினைகளும் சரியாகும். அதை நோக்கியே பயணித்து வருகிறோம்.
திமுக அரசு வந்த பிறகு மகளிருக்குப் பல நலத்திட்டங்கள் கொண்டு வந்துள்ளனர். பல நூலகங்களைத் திறந்துள்ளனர். புத்தகத் திருவிழாக்களை நடத்தியுள்ளனர். படிப்பு எந்தளவுக்கு முக்கியம் என்பதை மாணவர்களிடம் கொண்டு செல்கிறார்கள். இதை வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்குச் செய்தது இல்லை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications