சசிகலாவுக்கு முற்றும் நெருக்கடி.. அதிமுக தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவிட்ட சைதாப்பேட்டை நீதிமன்றம்
சென்னை: சசிகலாவுக்கு எதிராக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு வந்து அதிரடி காட்டினார். ஆனால் சென்னை வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அமைதி கொண்டார்.

சசிகலாவின் அதிரடி
ஆனால் சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் தனது அமைதியை கலைத்த சசிகலா அதிமுகவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதன்பிறகு தான் வெளியிடும் அறிக்கைகள், செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறத் தொடங்கினார்.

அதிமுக சார்பில் புகார்
தற்போது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற முழு மூச்சில் இறங்கியுள்ள சசிகலா அவ்வப்போது அதிரடி அறிக்கைகள் வெளியிடுவது, பேட்டிகள் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கிடையே
அதிமுகவின் பொதுச் செயலாளர் என சசிகலா தன்னை பிரகடனப்படுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல்நிலைய போலீசாருக்கு அறிவுறுத்துமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை
கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனுவை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் சசிகலா இந்த உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மனுவில் அதிமுக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சைதாப்பேட்டை 17- வது நிதித்துறை நடுவர் கிருஷ்ணன் விசாரித்தார்.

சசிகலாவுக்கு நெருக்கடி
அப்போது அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் மாம்பலம் காவல் ஆய்வாளர் இது தொடர்பாக வருகிற 20-ம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில் சசிகலாவுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications