சசிகலா பாணியில் ஓபிஎஸ்ஸை ஓரம்கட்ட முடிவு? அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தின் பரபர பின்னணி
சென்னை: சசிகலா பாணியில் ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இருந்து ஓரம் கட்டுவதற்காக தான் முன்னறிவிப்பு ஏதுமின்றி அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கியுள்ளது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதனை விடுவதாக இல்லை.
பொதுக்குழுவில் ஏற்பட்ட அவமானத்துக்கு பிறகு டெல்லி சென்ற ஓ பன்னீர் செல்வம் சில பாஜக நிர்வாகிகளை சந்தித்து நேற்று சென்னை திரும்பினார். அதன்பிறகு அவர் இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தேனி சென்றார்.
கையெழுத்தே இல்லயே.. அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது.. ஓ பன்னீர் செல்வம் பரபர அறிக்கை
தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்
ஓ பன்னீர் செல்வம் சொந்த ஊரில் இருந்த நிலையில் தான் தலைமை நிலைய செயலாளர் என் பெயர் பொறிக்கப்பட்ட அறிக்கை வெளியானது. அதன்படி ‛‛கழக நிர்வாகிகள் கேட்டு கொண்டதற்கு இணங்க நாளை (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும்'' என கூறப்பட்டு இருந்தது.
ஓ பன்னீர் செல்வம் அறிக்கை
இந்த அறிக்கை வெளியான நிலையில் ஓ பன்னீர் செல்வம் இரவில் அறிக்கை வெளியிட்டார். அதில், ‛‛அதிமுக சட்ட, திட்ட விதி 20A (V)-ன் கீழ் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. இருவரின் ஒப்புதலை பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும்.
யாரையும் கட்டுப்படுத்தாது
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமாக ஒப்புதலையும் அளிக்கவில்லை. இதனால் இத்தகைய கூட்டம் சட்டத்துக்கு புறம்பானதாகும். இதானல் இந்த கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணை்ப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கட்சி, தொண்டர்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்'' என குறிப்பிட்டு இருந்தார்.
ஓ பன்னீர் செல்வத்தை ஓரம்கட்ட திட்டமா?
ஏற்கனவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாகி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. இந்நிலையில், தான் தற்போது திடீரென்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வத்தின் பதவியை பறிக்க திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஓ பன்னீர் செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டாதா சிவி சண்முகம் கூறிய நிலையில் அவரது பொருளாளர் பதவி அல்லது கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க திட்டமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சசிகலா பாணியில் ஓபிஎஸ் மீது நடவடிக்கையா?
இதற்கு முன்பு இதே பாணியில் தான் சசிகலாவின் பதவி பறிக்கப்பட்டது. அதாவது சசிகலாவை கட்சியில் நீக்குவது தொடர்பாக அப்போதைய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுக கூட்டத்தை தொடர்ந்து கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தொடர்ந்து ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு 2017 செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பாணியில் தான் ஓ பன்னீர் செல்வத்தின் பதவியை பறிப்பது அல்லது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட்டு ஜூலை 11ல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் தான் ஓ பன்னீர் செல்வம் இந்த கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது. இது எடுக்கும் முடிவுகள் கட்சி தொண்டர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது எனக்கூறியுள்ளார்.