ஓபிஎஸ் கட்சியில் கிடையாது! உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனு! நாளை வரும் அதிமுக அலுவலக சாவி வழக்கு
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தற்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‛‛ஓ பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது சாவியை அவரிடம் ஒப்படைக்க எந்த முகாந்திரமும் இல்லை'' என கூறப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் போக்கு உள்ளது.
ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் அவமானப்படுத்தப்பட்டார். மேலும் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

அதிமுக அலுவலகத்தில் மோதல்
அன்றைய தினம் சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சென்றனர். அங்கு அவர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தென்சென்னை வருவாய் கோட்டாச்சியர் சார்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அதிமுக சாவியை கைப்பற்றிய ஈபிஎஸ்
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் சார்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பித்தது. ஜூலை 20ல் பிறப்பித்த உத்தரவில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் கூறியது. மேலும் ஒருமாதம் வரை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்ககூடாது என நீதிமன்றம் கூறியது. இந்த காலம் முடிந்த நிலையில் 72 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமை கட்சி அலுவலகத்துக்கு சென்றார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே தான் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு
இந்த உத்தரவு பிறப்பித்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் உச்சநீதிமன்றத்தல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‛‛ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். ஓ பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது அலுவலகத்துக்கு உரிமைகோர முடியாது. பண விஷயத்தில் ஓபிஎஸ் கையாடல் நடத்தியுள்ளார்; அலுவலக சாவியை அவரிடம் கொடுக்கக்கூடாது. அவர் கட்சி தலைமை அலுவலகத்தின் சாவியை தன்வசம் ஒப்படைக்க கோருவதில் எந்த முகாந்திரமும் இல்லை'' என்பன போன்ற விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

வருவாய் கோட்டாச்சியர் பதில் மனு
இதபோல் தென்சென்னை வருவாய் கோட்டாச்சியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‛‛அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்தவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது என்பது உயர்நீதிமன்றத்தில் உத்தரவுக்கு உட்பட்டது'' என்பன போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாளை விசாரணை
ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வருவாய் கோட்டாச்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இடையே பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications