அமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கை
சென்னை: அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்ததற்கு மணல் திருட்டே காரணம் என்று அதிமுக ஒருங்கணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். உயிரிழந்த 6 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம், மாம்பறை பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் தாராபுரம் அமராவதி ஆற்றின் புதுப்பாலம் பகுதியில் வரும்போது வாகனத்தை நிறுத்திவிட்டு அமராவதி ஆற்றில் இறங்கி குளித்ததில் 6 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
திருமண விருந்தில் அதிமுக ஜெயகுமாரின் சாதுர்யம்.. மாஸ்க்கை எங்க வச்சிருக்காரு பாருங்க.. வேற லெவல்
காரணமே இதுதான்
அதற்குக் காரணம் திமுக.,வினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டது தான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிப்பது என்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர் உயிரிழப்பு
இந்த மாதம் 17-ஆம் தேதி திருப்பூர் இடுவாய் கிராமம் அண்ணாமலை கார்டன் பகுதியைச் சேர்ந்த திருவாளர்கள் அமிர்தகிருஷ்ணன், ஸ்ரீதர், யுவன், மோகன், சக்கரவர்மன், ரஞ்சித், ஜீவா மற்றும் சரண் ஆகிய எட்டு பேர் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் அமராவதி ஆற்றில் இறங்கிக் குளித்தனர். இவர்களில் திருவாளர்கள் ஜீவா மற்றும் சரண் தவிர எஞ்சிய ஆறு பேரும் ஆற்றில் மூழ்கி பலியாகிவிட்டதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கிய ஆறு பேர்களின் உடல்களை மீட்டெடுத்து பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாரண உதவி எங்கே?
இவர்களை காப்பாற்ற முயன்று படுகாயமுற்ற திருவாளர்கள் ஜீவா மற்றும் சரண் ஆகியோர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்திற்குக் காரணம் சம்பவம் நடந்த பகுதியில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறியதாகவும், முதல்வரின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு அறிவுரை வழங்கியதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை எந்தவித நிவாரண உதவியும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆளும் கட்சி இப்படி செய்யலாமா?
இந்தச் சூழ்நிலையில், விபத்திற்கு வேறுவிதமான காரணங்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களும், அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர். அதாவது, அண்மையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கு முன்பு மாணவர்கள் குளித்த பகுதியில் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணீர் இருந்ததாகவும், ஆழமான பகுதியாக அது இல்லை என்றும், தண்ணீர் குறைவாக இருந்த சமயத்தில் சுமார் இருபது அடி ஆழத்திற்கு திமுகவினரால் திருட்டு மணல் அள்ளப்பட்டு கடத்தப்பட்டதாகவும், பின்னர் ஆற்றிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டவுடன் அந்தப் பகுதி ஆழமான பகுதியாகிவிட்டதாகவும், இந்த மணல் திருட்டுதான் அப்பாவி மாணவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் என்றும், இதனை மூடி மறைக்கும் பணியில் ஆளும் கட்சியினரும், அரசு நிர்வாகமும் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
தலா ரூ.25 லட்சம் கொடுக்கணும்
மாணவர்களின் உயிரிழப்புக்கு திருட்டு மணல் அள்ளப்பட்டதும், அதனை அரசு நிர்வாகம் வேடிக்கைப் பார்த்ததும்தான் காரணம் என்பதாலும், உயிரிழந்தவர்களைச் சேர்ந்த அனைத்துக் குடும்பங்களும் மிக ஏழ்மை நிலையில் உள்ளதாலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்துக் குடும்பங்களும் இளம் பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு தவித்துக் கொண்டிருக்கின்றன.
முதல்வரே கவனம் வேண்டும்
எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, இளம் பிள்ளைகள் உயிரிழப்புகளுக்கு காரணமான திருட்டு மணல் அள்ளப்பட்டது குறித்து தீர விசாரித்து தவறிழைத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.