நீதிமன்றத்தை அவமதிப்பதாக புகார்... “வாய்தா” திரைப்படத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை: இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'வாய்தா' என்ற திரைப்படத்தில் நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வலியுறுத்தி கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
அறிமுக இயக்குநர் மகி வர்மன் இயக்கியுள்ள "வாய்தா" என்ற திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
7 ஆண்டுகளாக சிறுமி “டிஜிட்டல் பலாத்காரம்”! கம்பி எண்ணும் ரைடர்! அதென்ன ’டிஜிட்டல்’? திகைத்த போலீஸ்!
நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார்.
20 சர்வதேச விருதுகள்
கதாநாயகியாக ஜெசிகா நடிக்கும் இப்படத்தில் கே.டி. கருப்புதுரை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்த மு.ராமசாமி, நக்கலைட்ஸ் புகழ் பிரசன்னா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 20-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது.
அரசியல் தலைவர்கள் பாராட்டு
இதன் சிறப்புக் காட்சிகளை அண்மையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சி.மகேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அண்மையில் பார்வையிட்டு வாழ்த்தினர்.
வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையிலும், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் மனம் புண்படும் வகையிலும் இருப்பதாக வழக்கறிஞர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. பணக்காரர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்றும் ஏழைகளுக்கு உரிய நீதி கிடைக்காது எனவும் பொருள்படும்படி படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போராட்டம்
இந்த நிலையில் படக்குழுவை கண்டித்து வழக்கறிஞர்கள் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். மேலும் தணிக்கை சங்கத்தினருடன் ஆலோசித்த பின்னர் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.