பிக்பாஸில் ஒலித்த “பெரியார்”.. விக்ரமன் பேச்சை “கட்” செய்தது ஏன்? அம்பேத்கரை தொடர்ந்து புதிய சர்ச்சை
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர் குறித்தும் மலைப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அகற்றப்படுவது குறித்தும் போட்டியாளர் விக்ரமன் தெரிவித்த கருத்துகள் ஒளிபரப்பப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது தந்தை பெரியார் என விக்ரமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உச்சரித்தபோது அது மியூட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 வது சீசன் தற்போது 80 நாட்களை கடந்து உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விக்ரமனும் பங்கேற்று விளையாடி வருகிறார்.
அரசியல்வாதி என்றே அறிமுகத்துடனே விளையாடி வரும் விக்ரமன் ரசிகர்களின் மனதை கவர்ந்து உள்ளார். பிக்பாஸ் வீட்டில் அஜீம், மணிகண்டன் போன்ற அனைத்து போட்டியாளர்களும் அத்துமீறி நடந்தபோது அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார்.
விக்ரமனால் எனக்கு பெருமை.. என்னிடம் கேட்ட பிறகே பிக்பாஸ் சென்றார் - நெகிழ்ச்சியடைந்த திருமாவளவன்
முற்போக்கு கருத்துக்கள்
பிற்போக்கான, பெண்கள் அல்லது குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசினால் அதை வெளிப்படையாகவே விக்ரமன் கண்டித்து வந்தார். இதனால் வீட்டிற்குள் அவருக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், வெளியில் மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு உள்ளது. கமல்ஹாசனும் அவரை பல முறை பாராட்டி உள்ளார்.
மலக்குழி மரணங்கள்
அதேபோல் ஒரு எபிசோடில் துப்புறவு தொழிலாளியாக நடித்து மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்திற்கு எதிரான விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார். மற்றொரு வாரம் அந்நியன்போல் அவரை பிக்பாஸ் நடிக்க சொன்னபோது அந்த படத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று வெளிப்படையாகவே கூறினார்.
விக்ரமன் ஓவியம்
இந்த நிலையில் கடந்தவாரம் சமூகம் சார்ந்த ஓவியம் வரைய வேண்டும் என்ற டாஸ்கை பிக் பாஸ் கொடுத்தார். அதில் சக போட்டியாளர்களின் ஓவியங்களை வரைந்து அதில் விளக்கம் கொடுத்திருந்தனர். ஆனால், மலைப்பகுதிகளை சில ஆக்கிரமித்து அங்கு வசிக்கும் பழங்குடி மக்களை வெளியேற்றுவதற்கு எதிராக விக்ரமன் வரைந்த ஓவியமும், அதற்கு அவர் அளித்த விளக்கமும் காட்டப்படவில்லை.
அம்பேத்கருக்கு கடிதம்
அதே வாரம் தாங்கள் விரும்பியவர்களுக்கு கடிதம் எழுதும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில், விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அது ஒரு மணி நேர டிவி எபிசோடிலும், 24 மணி நேர நேரலையிலும் காட்டப்படவில்லை. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் மறுநாள் அவர் கடிதம் வாசிப்பது ஒரு மணி நேரம் எபிசோடில் ஓளிபரப்பட்டது. சனிக்கிழமை எபிசோடிலும் கமல்ஹாசன் விக்ரமனிடம் அம்பேத்கர் கடிதம் பற்றி பேச வைத்து பாராட்டினார். அப்போது அவருக்கே கண் கலங்கின.
ஏடிகேவிடம் பேசிய விக்ரமன்
இந்த நிலையில் இன்று 24 மணி நேர நேரலையில் விக்ரமன் சக போட்டியாளரான எடிகேவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பிறர் சொல்வதை அப்படியே நம்பி அதன்படியே செயல்படுவது பற்றி விக்ரமன் பேசிக்கொண்டு இருந்தார். யாராலும் யாருமே இன்ஃப்ளூயன்ஸ் ஆகக்கூடாது என்று அவர் கூறினார்.
|
பெரியார் பெயர்
அப்போது "நானே சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பகுத்தறிய வேண்டும். அது சரியா? தவறா? என்று உங்கள் அறிவுக்கு எட்டியை பாருங்கள். சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்." என்று தந்தை பெரியாரின் மிக முக்கிய கருத்தை மேற்கோள் காட்டினார். அப்போது பெரியார் என்று விக்ரமன் உச்சரிக்கும் இடத்தில் அந்த பெயர் வராமல் மியூட் செய்யப்பட்டுவிட்டதாக வீடியோ பகிர்ந்து நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.