தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவில் அரங்கேறப் போகும் அதிரடி மாற்றங்கள்! ஸ்டிரிக்ட் ஆக்ஷன் உறுதி!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவில் ஒரு சில அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் நுறு சதவீத வெற்றியை கொடுக்காத நிர்வாகிகள் மீதும் உள்ளடி வேலை பார்த்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருக்கிறதாம் திமுக தலைமை.
இதனால் மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் என பலரும் தலைமையின் நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக, தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஓடியாடி தீயாய் வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதேபோல் வரும் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் ஆளுங்கட்சியாக இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக நூறு சதவீத வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார். அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் தேர்தல் பணிகளுக்காக நேரம் ஒதுக்கி தினமும் செலவிட்டு வருகிறார்.

நடவடிக்கை உறுதி
இந்நிலையில் கோவை, தென்காசி, சேலம், என பல மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக சொந்தக்கட்சியினரே உள்ளடி வேலை பார்க்கும் தகவல் அறிவாலயத்தை எட்டியிருக்கிறது. அதேபோல் நிர்வாகிகள் சிலர் அஜாக்கிரதையாக தேர்தல் பணியாற்றுவது தொடர்பான புகார்களும் குவிந்து வருகிறது. இது தொடர்பாக இப்போது கண்டும் காணாமல் விட்டுப்பிடிக்கும் ஸ்டாலின், தேர்தல் முடிவு தாம் எதிர்பார்த்ததற்கு மாறாக வரும் பட்சத்தில், மாவட்டம், நகரம் வாரியாக நிச்சயம் கட்சியில் களையெடுப்பை நடத்துவார் எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.

சட்டமன்றத் தேர்தல்
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பொள்ளாச்சி தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவுக்கு தோல்வியை பெற்றுக்கொடுத்த சேலம், தருமபுரி, கோவை மாவட்ட திமுகச் செயலாளர்கள் கூண்டோடு மாற்றப்படுவார்கள் என பேசப்பட்ட நிலையில் அது போன்று எந்த ஆக்ஷனும் எடுக்காமல் அரசுப் பணிகளில் கவனம் செலுத்தினார் ஸ்டாலின்.

தீயாய் வேலை
ஆனால் இந்த முறை கட்சிக்காக தேர்தல் பணியாற்றாதவர்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது என்பதில் முதல்வர் ஸ்டாலினும் சரி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சரி மிக உறுதியாக இருக்கிறார்களாம். இதனால் தேர்தலுக்கு 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுகவில் மாவட்டச் செயலாளர் தொடங்கி பகுதிச்செயலாளர் வரை தீயாய் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications