தமிழ்நாட்டு மீனவர் மீது துப்பாக்கிச் சூடு! இலங்கை ராணுவம், ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகாவும் அட்டூழியம்!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடகா துப்பாக்கிச் சூடு நடத்திய கொடுமை நிகழ்ந்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அண்டை நாடான இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது; தமிழ்நாட்டு தொழிலாளர்கள் மீது அண்டை மாநிலமான ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டு மீனவர்களும் இலங்கை தமிழ் மீனவர்களும் பாரம்பரியமாகவே இணைந்து மீன்பிடித்தனர். இதன் சாட்சியமாகத்தான் இன்றும் இருக்கிறது கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம்.

தமிழ்நாட்டு மீனவரால் கட்டப்பட்டது அந்தோணியார் தேவாலயம். கச்சத்தீவு தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது; பொருட்கள் மட்டுமேயான பண்டமாற்று சந்தையாக இல்லை.. தமிழ்நாட்டு உறவுகளிடம் இருந்து பெண் எடுப்பதற்கும், பெண் கொடுப்பதற்குமான ஒரு திருவிழாவாக கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவும் இருந்தது என்பது ஒரு காலம்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கச்சத்தீவு எல்லையே மயான தீவாகிப் போனது. கச்சத்தீவு எல்லையில் மீன்பிடித்தார்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கையின் சிங்கள ராணுவம் சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது. மொத்தம் 800 மீனவர்கள் இனப்படுகொலை செய்ய்யப்பட்டிருக்கின்றனர். இந்த அநீதியை தட்டிக் கேட்கத்தான் எந்த ஒரு நாதியும் இல்லாமல் தமிழ்நாட்டு தமிழினம் கையறு நிலையில் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறது.
அண்டைநாடான இலங்கை தான் இப்படி வேட்டையாடுகிறது என்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திரா போலீசாரும் இப்படி ஒரு ஈவிரக்கமற்ற மனிதப் படுகொலையை நிகழ்த்தினர். செம்மரக் கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி 20 தமிழ்நாட்டு தொழிலாளர்களை ஆந்திரா வனப்பகுதியில் காக்கை குருவிகளைப் போல சுட்டுப் படுகொலை செய்து வீசியது. இந்த பச்சைப் படுகொலையை கண்டிக்கவோ பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதியை பெற்றுத்தரவோ எந்த ஒரு ஜீவனும் ஆபத்பாந்தவனாய் தமிழருக்கு இன்று வரை கிடைக்கவில்லை.
இந்த துயரங்களுக்கு நடுவே இப்போது கர்நாடகா வனத்துறையும் தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டையாடி இருக்கிறது. சேலம் மேட்டூர் அருகே பாலாற்றில் தமிழ்நாட்டு மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடித்ததைக் கூட கர்நாடகாவால் பொறுக்கவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களைத் தடுத்துக் கொண்டே வந்த கர்நாடகா இப்போது துப்பாக்கித் தோட்டாக்களை சீற வைத்திருக்கிறது. கர்நாடகாவின் இந்த படுகொலை ஆட்டத்துக்கு ஒரு தமிழ்நாட்டு மீனவர் பலியாகி இருக்கிறார். இப்படி திரும்பிய திசை எல்லாம் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்கின்ற வெங்கொடுமைக்கு விடிவுகாலம் எப்போதுதானோ?












Click it and Unblock the Notifications