துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம்.. தமிழக அரசின் மசோதா இன்று இரவே சட்டமாகிறது
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் மசோதாவுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இந்த மசோதா, இன்று இரவே சட்டம் ஆகிறது என்றும், அரசிதழில் இன்று வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இதனால் ஆளுநரும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், "குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது தவறானதாகும். 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்ட விரோதமானது. ஒருதலைபட்சமானது.
10 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்து இருப்பதற்கு ஆளுநருக்கு வீட்டோ போன்ற அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? 10 மசோதாக்களை ஜனாதிபதி பரிசீலனைக்காக நிறுத்தி வைத்த ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே ஆளுநரின் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்" என்று அதிரடி தீர்ப்பளித்தது.
தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த (2-வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக முதல்வர் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்ற மசோதா, இன்றிரவுக்குள் சட்டமாகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்த நிலையில், இச்சட்டத்தை அரசிதழில் வெளியிடுவது குறித்து சட்டத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆலோசனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications