கெடு ஓவர்.. பேச்சை கேட்கவில்லை! துபாய் ட்ரிப் முடிந்ததும்.. சாட்டையை சுழற்றும் முதல்வர்! லிஸ்ட் ரெடி
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தனது துபாய் பயணம் முடிந்து டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இதன் பின் தமிழ்நாடு வந்ததும் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். துபாயில் தொழிலதிபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் 2600 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் இதன் மூலம் 9600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதல்வர் சென்றது வெளிநாட்டு பயணமா? இல்லை சுற்றுலாவா?.. கே பி முனுசாமி கேள்வி
என்ன செய்வார்?
தற்போது துபாயில் இருக்கும் முதல்வர் பயணம் முடிந்த பின் டெல்லி செல்வார். 31ம் தேதி ஸ்டாலின் டில்லி செல்ல திட்டமிட்டுள்ளார். பின்னர் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அதோடு திமுகவின் புதிய அலுவலக திறப்பு விழாவில் , ஏப்., 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதன் பின்னர் தமிழ்நாடு வரும் முதல்வர் ஸ்டாலின் சில திமுக நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது.
திமுக மறைமுக தேர்தல்
இதையடுத்து தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றனர். விசிக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வென்றன. இப்படி தேர்தலில் வென்றவர்கள் உடனே பதவி விலக வேண்டும். என்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் உத்தரவிட்டார்.
நீக்கம்
ஆனால் இதை கேட்காமல் இருந்த நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி தேர்தலில் இப்படி கூட்டணி கட்சிகளின் தோல்விக்கு காரணமாக இருந்த மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள் ஆகியோர் மீதும் பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்தார். அதே சமயம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவை ஏற்று சில நிர்வாகிகள் பதவியும் விலகினார். இன்னும் பலர் பதவி விலகாமல் உள்ளனர். தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக கூறி நகர செயலர்கள் ஏன் கடலூர் எம்எல்ஏ அய்யப்பன் உட்பட பலர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நடவடிக்கை ஸ்டாலின்
பூந்தமல்லி நகர செயலாளர் ரவி குமார், கன்னியகுமார் கிழக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் அவரின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில்தான் இதுவரை பதவி விலகாத நிர்வாகிகள் மீது முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்திற்கு பின் நடவடிக்கை எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி முதல்வர் ஸ்டாலின் 26ம் தேதி வரை இவர்கள் பதவி விலகி, கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை வழங்க கெடு விதித்து இருந்தார்.
பதவி விலகவில்லை
ஆனால் திமுக நிர்வாகிகள் சிலர் இந்த உத்தரவை மதிக்கவில்லை. இவர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு நேற்றோடு முடிந்துவிட்டது. இதனால் முதல்வர் திரும்பி வந்தது அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த நிர்வாகிகளும் நீக்கப்படுவார்கள். பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்தவர்களை கட்சி தலைமை மன்னித்துவிடும். இவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஸ்டாலின் மன்னிக்க மாட்டார்
ஆனால் இதுவரை ராஜினாமா செய்யாதவர்களை முதல்வர் ஸ்டாலின் மன்னிக்க மாட்டார். அவர்கள் முதல்வர் பேச்சை கேட்கவில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்குவது மட்டுமின்றி நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில் கொண்டு வரப்பட்டு, அவர்கள் முறைகேடாக பெற்ற பதவிகளும் பறிக்கப்படும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சில நகராட்சி, பேரூராட்சியில் உள்ள திமுக நிர்வாகிகள் மீது கடும் ஆக்சன் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.