காயத்ரி ரகுராம் ரிலீஸ் செய்த சீமான் கடிதம்! ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு பின் சந்திப்பதாக பரபர ட்வீட்!
நாம் தமிழர் கட்சி சீமானை சந்திக்க போவதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பியை திடீரென சந்தித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ள காயத்ரி ரகுராம் அவரை விரைவில் நேரில் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.
பாஜகவின் கொள்கைகளை அதிதீவிரமாக பேசியவர் நடிகை காயத்ரி ரகுராம். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய காயத்ரி ரகுராம் பாஜகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தார். ஒருகட்டத்தில் காயத்ரி ரகுராம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான மோதல் வெடித்தது. இதில் காயத்ரி ரகுராம் முதலில் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகுவதாகவும் அறிவித்தார்.

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், விசிக அல்லது திமுகவில் இருந்து அழைப்பு வந்தால் இணைந்து பணியாற்றுவேன் என கூறியிருந்தார். இதன்பின்னர் தொடர்ந்து அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு பாஜகவை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தார் காயத்ரி. இந்நிலையில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அண்ணன் என பாசத்துடன் பதிவிட தொடங்கினார். மேலும் சென்னையில் திருமாவளவவனை நேரில் சந்தித்தும் பேசினார் காயத்ரி ரகுராம்.
இச்சந்திப்பு தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமாவளவன், அம்பேத்கர் திடலுக்கு வந்த
@Gayatri_Raguram அவர்களுக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன் என குறிப்பிட்டிருந்தார். இதனால் விசிகவில் காயத்ரி ரகுராம் இணைவாரா? என்கிற கேள்விகளும் எழுந்தன.

இந்த பரபரப்புகளுக்கு இடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமக்கு எழுதிய கடிதம் ஒன்றை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தி உள்ளார் காயத்ரி ரகுராம். சீமான் எழுதிய கடிதத்தில், அரசியல் களத்தில் பெண்கள் பங்கு குறித்தும் பெண்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் மனம் தளரக் கூடாது என்றும் காயத்ரி ரகுராமுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு திரு.சீமான் அண்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்ததற்காக நன்றி கூறுவேன் எனவும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.












Click it and Unblock the Notifications