மக்களே கவனம்.. பொங்கலையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. தடை எங்கே? பார்க்கிங்கிற்கு வசதி
சென்னை: சென்னையில் பொங்கலையொட்டி போக்குவரத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதோடு காணும் பொங்கலில் மெரினா கடற்கரை செல்வோர் வாகனங்களை பார்க்கிங் செய்ய வசதியான இடங்களின் பட்டியலை சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு செவ்வாய்க்கிழமை மாட்டு பொங்கலும் புதன் கிழமையான 17 ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் திருநாளில் மக்கள் மெரினா கடற்கரையில் அதிகளவில் கூடுவது உண்டு.

லட்சக்கணக்கான மக்கள் தங்களின் குடும்பத்துடன் வந்து மெரினாவில் காணும் பொங்கலை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல் மெரினா கடற்கரையில் மக்கள் அதிகளவில் கூடலாம். இதையொட்டி சென்னை போக்குவரத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 17 ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜன் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்கவரத்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.
மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும்போது போர் நினைவு சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல் கலங்கரை விளக்கம் நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
மேலும் வாகன நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஃபோர்ஷோர் சாலை, விக்டோரியா வார்டன் விடுதி, கலைவாணர் அரங்கம் பார்க்கிங், பிரசிடென்சி கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகம், டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை), எம்ஆர்டிஎஸ் - சேப்பாக்கம், லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி மகளிர் கல்லூரி, சீனிவாசபுரம் லூப் ரோடு/மைதானம், பிடபிள்யூடி மைதானம் (தலைமை செயலகம் எதிரில்), செயின்ட் பீட் மைதானம், அன்னை சத்யா நகர், ஈவிஆர் சாலை மருத்துவக்கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்), தலைமை செயலகத்தில் உள்ளே (காவல்துறை வாகனங்கள்) நிறுத்த பார்க்கிங் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications