பாஜகவின் 20% கணக்கு.. 59 தொகுதிகளை கேட்க தயாராகும் டெல்லி.. எடப்பாடிக்கு எகிறும் நெருக்கடி!
சென்னை: தமிழக பாஜக தரப்பில் சுமார் 20 சதவிகித தொகுதிகளை அதிமுக தலைமையிடம் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டசபைத் தொகுதிகளில் 20 சதவிகிதம் என்பது சுமார் 59 தொகுதிகள் என்பதால், அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதனால் பாஜக டெல்லி தலைமையின் பேச்சை எப்படி எடப்பாடி பழனிசாமி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் வளர வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதால், கூட்டணி தலைமையிடம் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். அதேபோல் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

லோக்சபா தேர்தலில் பாஜக
இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடிக்க தயாராகி வருகின்றனர். இதனிடையே லோக்சபா தேர்தல் வாக்கு சதவிகித அடிப்படையில் தொகுதிகளை கேட்க பாஜக தலைமை தயாராகி வருகிறது. லோக்சபா தேர்தலில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 9 இடங்களில் 2வது இடமும், 13 இடங்களில் 3வது இடமும் பெற்றது.
59 தொகுதிகள்
மொத்தமாக 11.4 சதவிகித வாக்குகளை பெற்றது. இதில் ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் அடக்கம். பாஜக கூட்டணியாக சுமார் 18 சதவிகித வாக்குகளை பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் சுமார் 20 சதவிகித தொகுதிகளை பாஜக கேட்க தயாராகி இருக்கிறது. 20 சதவிகித தொகுதிகள் என்பது தமிழ்நாட்டில் சுமார் 59 தொகுதிகளாகும்.
பாஜகவின் எண்ணம் என்ன?
பாஜகவுக்கு 59 தொகுதிகளை விட்டுக் கொடுத்தால், பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக 123 தொகுதிகளில் போட்டியிட்டதை போன்ற சூழலை அதிமுக எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். ஆனால் பாஜகவின் கணக்கு 59 தொகுதிகள் என்று தொடங்கப்பட்டு, 35 முதல் 45 தொகுதிகளை பெறுவதே இலக்கு என்று சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி திட்டம்
அதாவது தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள சுமார் 44 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக குறியாக உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி 25 தொகுதிகளோடு பாஜகவின் தொகுதிப் பங்கீட்டை முடிக்க திட்டமிட்டு வருகிறார். இதனால் பாஜக தலைமையை எப்படி எடப்பாடி பழனிசாமி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாவட்டத்திற்கு ஒரு தொகுதி
அதேபோல் பாஜக தரப்பில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் கட்டாயம் ஒரு தொகுதியை அதிமுக வசம் பெற்று வெற்றிபெற வேண்டும் என்றும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications