மு.க ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கு விஸ்வரூபம்.. கிலியில் திமுக! அதிமுக- பாஜக பரபர வியூகம்!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 2011-ம் ஆண்டு தேர்தல் வழக்கு தூசு தட்டப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக இணைந்து ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை கையில் எடுத்திருப்பதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததைவிட கூடுதலாக ஸ்டாலின் தேர்தல் செலவுகள் செய்தார் என்பதுதான் சைதை துரைசாமியின் வழக்கு.
நிலை மாறு உலகில்....அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக? திமுக அணியா? தனித்து போட்டியா?
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் 2017-ல் மு.க.ஸ்டாலினின் தேர்தல் வெற்றி செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்போது உச்சநீதிமன்றத்தில் சைதை துரைசாமி மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கில் ஸ்டாலினுக்கு எதிரான அசைக்க முடியாத பல ஆதாரங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
திமுக மீதான வழக்குகள்
பின்னர் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. ஸ்டாலினுக்கு எதிரான இந்த வழக்கு கிடப்பில் போனதன் பின்னணியில் லண்டனில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் ஒருவரின் கைங்கர்யம் இருக்கிறது என்பது அரசியல்வட்டாரங்கள் அறிந்த செய்தி. இந்த நிலையில் திமுகவுக்கு எதிரான வழக்குகளை தூசுதட்டுவது என அதிமுகவும் டெல்லியும் முடிவு செய்தன.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இதில் முதலில் சிக்கியது ஸ்டாலினுக்கு எதிரான வழக்குதானாம். இப்படி ஆதாரங்கள் இருந்தும் ஏன் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது? நிச்சயம் இது ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் பெரிய பின்னடைவைத்தான் தரும் என கணக்குப் போட்டு அதிமுகவை சேர்ந்த சரவணன் என்ற சுயேட்சை வேட்பாளர் மூலம் வழக்கை விரைவுபடுத்த கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
கடும் அதிர்ச்சியில் திமுக
இது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் எப்பாடுபட்டாவது ஜெயித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் நிலையில் இந்த தேர்தல் வழக்கில் நெகட்டிவ் தீர்ப்பு வந்தால் அதாவது மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது- அவரை தகுதி நீக்கம் செய்யலாம் என தீர்ப்பு வந்தால் அத்தனையும் சல்லி சல்லியாக நொறுங்கிவிடும் என்பதுதான் திமுகவின் கவலை.