"விவிஐபிகளாகவே" இருங்க.. ம்ஹூம்.. எங்ககிட்ட நடக்காது.. பாஜகவிடம் கெத்து காட்டிய அதிமுக
சென்னை: அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாக ஆயிரம்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்தாலும், அப்படி எதுவுமே இல்லை என்று சொல்வதைப் போல அமைந்துவிட்டது வேட்பாளர் பட்டியல்.
அதுவும் சாமானியர்களுக்கு என்றால் கூட பரவாயில்லை.. மிக முக்கிய விவிஐபிகளுக்கு கூட பாஜக கேட்ட தொகுதியை வழங்கவில்லை அதிமுக.
அது மட்டும் கிடையாது. விரும்பிய தொகுதிகளை கூட வழங்கவில்லை என்பது தான் அதிமுக நேற்று வெளியிட்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் உள்ள முக்கிய அம்சம்.

பாஜக விரும்பிய மண்டலங்கள்
கோவை மற்றும் அதன் சுற்று வட்டார மண்டலங்கள், சென்னை நகர்புறம் அதிலும் குறிப்பாக தெற்கு சென்னை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஆகியவற்றில் தாங்கள் வலுவாக இருப்பதாக பாஜக நம்புகிறது. ஆனால் பாஜகவுக்கு சென்னையில் 2 தொகுதியில் மட்டுமே ஒதுக்கியுள்ளது அதிமுக. ஆயிரம் விளக்கு மற்றும் துறைமுகம் ஆகிய இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரியில் ஓகே
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகள் கிடைத்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பாஜகவுக்கு ஓரளவுக்கு திருப்தி கிடைத்துள்ளது. ஆனால் மேற்கு மண்டலத்தில் மொத்தமாக பாஜகவுக்கு அதிருப்திதான். ஏனென்றால் கோவை தெற்கு தொகுதி, உதகமண்டலம், தாராபுரம் தனித் தொகுதி ஆகியவைதான் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முருகனே விரும்பினாராம்
ராசிபுரம், கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதிகளை மிகவும் விரும்பி கேட்பது பாஜக. அதிலும் பாஜக தலைவர் முருகன் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட விரும்பியதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதி பாஜகவுக்கு வழங்கப்படவில்லை. சென்னையை பொறுத்த அளவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்து வந்தார் குஷ்பூ. பாஜகவின் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவராக வேகமாக வளர்ந்து வந்தார். எனவே எப்படியும் அவர் இதில் வெற்றி பெற்று சட்டசபையில் கால் வைத்து விட வேண்டும் என்பது அவரது பெரும் கனவாக இருந்தது.

குஷ்புக்கு ஏமாற்றம்
காங்கிரசில் இருந்தபோது லோக்சபா தேர்தலில் அவருக்கு எங்குமே போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை. டிக்கெட் கிடைக்கும் என்று நினைத்திருந்த அவருக்கு ஏமாற்றம். இந்த நிலையில்தான் அதிமுக பாஜக கூட்டணியில் அவருக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கவில்லை. எனவே மனம் நொந்து போய் அவர் இன்று ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

கவுதமி நிலைமை
பாஜகவில் திடீரென வேகமாக வளர்ந்து வந்த மற்றொரு பெண் பிரபலம் கவுதமி. அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியிலிருந்து போட்டியிட வேண்டும் என்று மிகவும் விரும்பினார். அங்கேயே முகாமிட்டு வேலை பார்த்து வந்தார். அப்படியிருந்தும் அவருக்கும் அந்த தொகுதி வழங்கப்படவில்லை. சாட்சாத் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அங்கு போட்டியிடப் போகிறார்.

பாஜகவை கையாளும் அதிமுக
மேற்கு மண்டலம், தெற்கு சென்னை பகுதிகளில் அதிக தொகுதிகளை அதிகம் ஒதுக்காதது மட்டும் கிடையாது. விஐபிகள்.. மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்.. ஆகியோர் விரும்பிய தொகுதியும் வழங்கப்படவில்லை. இதன்மூலம் பாமக அளவுக்கு கூட மத்தியில் ஆளும் பாஜகவை, அதிமுக பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. இந்த நிலையில்தான் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டியின்போது, அதிமுகவுடன் கையேந்தி சில தொகுதிகளை பாஜக பெறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications