இரட்டை இலை சின்னம்.. கையெழுத்திட தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம்.. அதிமுக பொதுக்குழு தீர்மானம்!
இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்திடும் அதிகாரம் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடம் அதிகாரம் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை ஏற்கும் அல்லது மறுக்கும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் நாளை மாலைக்குள் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் விருப்ப படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதேபோல் இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தியது.
உலக அளவில் பிரதமர் மோடி தான் டாப்.. 78% மக்கள் ஆதரவு! இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு.. அடப்பாவமே
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை
இதையடுத்து அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஒப்புதல் படிவங்களை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம்
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இரட்டை இலை சின்னம் தொடர்பான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும், ஏற்காதவர்கள் ஏற்கவில்லை என்றும் வேட்பாளர் ஒப்புதல் படிபம் மூலம் நாளை மாலைக்குள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டு முறை
அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் என்றால் ஏற்பதாகவும், ஏற்கவில்லை என்றால் ஏற்கவில்லை என்றும் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் உள்ள வாக்குச்சீட்டில் வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை தங்களின் விருப்பம் வேறு வேட்பாளர் என்றால், அதனை வாக்குச்சீட்டில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக தீர்மானம்
இந்த வாக்குச்சீட்டின் மூலம் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்த அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த ஒப்புதல் அளிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.