அதிமுக ஆட்சியில் ஒருவருக்கே பல பணிகள்.. திமுக ஆட்சியில் அப்படியில்லை.. குற்றம்சாட்டும் எ.வ.வேலு!
சென்னை: அதிமுக ஆட்சியில் ஒரு ஒப்பந்ததாரருக்கு ஏராளமான பணிகள் வழங்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணி மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகாலை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சைதாப்பேட்டை பஜார் சாலையில் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே இரவு நேரங்களில் இரண்டு நாட்களில் பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை வரை உள்ள மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

மழைநீர் வடிகால் பணிகள்
சென்னையை பொறுத்தவரை கனமழை காரணமாக மழைநீர் பெரிய அளவில் எங்கும் தேங்கவில்லை. ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2.85 கோடி செலவில் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைய உள்ள நிலையில், எதிர்பாராத அளவு இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தொடர் ஆய்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் என்னையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மழை நீரை அகற்றும்படி ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

தண்ணீர் தேங்கவில்லை
20 நாட்களாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்கும் நோக்கில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்பொழுது அண்ணா சாலையில் ஒரு சொட்டு கூட தண்ணீர் தேங்கவில்லை. அதேபோல பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாலைகள் சீராக உள்ளது என்ற தகவல்கள் அதிகாரிகள் வாயிலாக கிடைத்திருக்கிறது.

ஒப்பந்ததாரருக்கு ஒரு பணி மட்டுமே
கடந்த ஆட்சியில் நிதி சுமையை ஏற்படுத்தி பணிகளை செய்தார்கள். தற்போது பணிகள் தொய்வு பெற்றிருக்கும் இடங்களை நாங்கள் கண்டறிந்து பணிகளை முடுக்கி விட்டிருக்கிறோம். கடந்த ஆட்சி காலத்தில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணியை கொடுத்தார்கள். ஒவ்வொரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணியை மட்டுமே வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். எனவே தற்போது ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணியை மட்டுமே வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழிகளை அடைக்கும் பணி
சில இடங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளை அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்த பின் அந்த சாலைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications