அதெப்படி பொதுச்செயலாளர் இல்லாமல் அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியும்? ஹைகோர்ட்டில் சசிகலா வாதம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லும் என்ற சிட்டி சிவில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா தரப்பு தமது வாதத்தை முன்வைத்தது. இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ல் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற போது அவரது உறவினர் டிடிவி தினகரன், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பொதுச்செயலாளர் சசிகலா தேர்வும் நீக்கமும்
ஆனால் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போனார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டன; மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் உருவாக்கப்பட்டன.

சசிகலா வழக்கும் நிராகரிப்பும்
ஆனால் பொது செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்த து.

ஹைகோர்ட்டில் அப்பீல்
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா தரப்பு வாதம்
இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு இன்று இறுதி விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வாதிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், சிவில் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை நிராகரித்தது தவறு என்றும், தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பாகவே முடிவு செய்து உத்தரவிட்டதாக குறிப்பிட்டார் . கட்சியின் உரிமை தொடர்பாக சிவில் நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தார்.தொடர்ந்து விசாரணையை வரும் 8-ந் தேதி நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications