அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்.. பாஜகவால் பரிதவிக்கும் செங்கோட்டையன்! எஸ்கேப்பான ஆதரவாளர்கள்!
சென்னை: அமைதியாக இருந்த அதிமுகவில் புயலை கிளப்பிய செங்கோட்டையன் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பு, ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை என படு பிசியாக செங்கோட்டையன் இருந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் நேற்று ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி இருக்கும் நிலையில் சென்னையிலேயே முகாமிட்டிருக்கிறார் செங்கோட்டையன். அவசரப்பட்டு அதிமுகவில் கலகத்தை உண்டு பண்ணி விட்டோமோ? என யோசிப்பதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழக அரசியலில் பேசுபொருளாக இருந்தவர் செங்கோட்டையன். மிக அமைதியான அரசியல்வாதி, எதையும் யோசித்து செய்பவர் என்ற பெயரைப் பெற்றவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியல் செய்து வருபவர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவர். அதனால் தான் அதிமுக பல சூழல்களில் சிக்கித் தவித்த போதும் எந்தவித பிரச்சினையிலும் சிக்காமல் இருந்தவர் செங்கோட்டையன். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்கும் வாய்ப்பு செங்கோட்டையனுக்குக் கிடைத்தது.

செங்கோட்டையன்
ஆனால் நிதி நெருக்கடி காரணமாக அதனை ஏற்க முடியாமல் போனது. அதே நேரத்தில் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. முதல்வராக்கிய சசிகலாவையும் டிடிவி தினகரனையும் வெளியேற்றியதோடு, தன்னை எதிர்த்து வாக்களித்த ஓ. பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆட்சியை நடத்தினார். இடையில் கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை அதிகாரமிக்க நபராக முன்னிறுத்திக் கொண்டார் எடப்பாடி.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை செங்கோட்டையனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் எடப்பாடியின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் செங்கோட்டையனால் குரல் கொடுக்கவும் முடியவில்லை. பாஜகவின் பேச்சைக் கேட்டு ஓ. பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில், தனக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தார் செங்கோட்டையன். அதே நேரத்தில் நாட்கள் செல்லச் செல்ல எடப்பாடி செங்கோட்டையன் இடையேயான விரிசல் அதிகரித்தது. அதன் வெளிப்பாடாகத்தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எடப்பாடிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஜெயலலிதாவை எடப்பாடி புறக்கணித்துவிட்டார் எனக் குற்றம் சாட்டினார் செங்கோட்டையன்.
அதிமுக மோதல்
அதற்குப் பிறகு அந்த விவகாரம் ஓய்ந்த நிலையில் தற்போது திடீரென அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். மனம் திறந்து பேசுவேன் என அவர் சொன்னது ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு அவரைச் சுற்றிய ஊடகத் தலைப்புச் செய்திகள் இருந்தன. இதற்கிடையே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும், அதற்குப் பத்து நாட்கள் கெடு விதிக்கிறேன் என செங்கோட்டையன் பேசியிருந்தார்.
அதிமுக தலைமை
அடுத்த நாளே அவரது கட்சிப் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி. ஈரோட்டில் தன்னைத் தவிர்த்து எந்த அதிமுக சக்தியும் இல்லை என செங்கோட்டையன் நினைத்த நிலையில், எம்எல்ஏ செல்வராஜை மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எடப்பாடி. அதுவரை செங்கோட்டையனின் ஆதரவாளர்களாக இருந்து பதவியை ராஜினாமா செய்தவர்கள் ஒரே நாளில் செல்வராஜின் ஆதரவாளர்களாக மாறினர். நேற்று எடப்பாடி பழனிசாமி நீலகிரி பிரச்சாரத்திற்குச் சென்றபோது திட்டமிட்டு கோபி வழியாகச் சென்றார். அப்போது ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள்
அதில் பெரும்பாலானோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாகப் பதவியை ராஜினாமா செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் தனது ஆதரவாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறிவிட்டதால் அதிர்ச்சியில் இருக்கிறார் செங்கோட்டையன். எடப்பாடி வருகை காரணமாக சென்னைக்குச் சென்று அவர் தற்போது சில நாட்கள் அங்கேயே தங்கி இருக்கத் திட்டமிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற பாஜகவின் பேச்சைக் கேட்டுத்தான் குரல் கொடுத்த நிலையில், பாஜகவும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். தற்போது தன்னை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் என ஆதரவாளர்களிடம் புலம்பினாராம் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications