சட்டசபையில் சலசலப்பு வருமா? இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. நாளை ஆலோசனை
சென்னை: சட்டசபை கூட உள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டசபையில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அக்டோபர் 17ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரையும், துணை கொறடா பதவியிலிருந்து மனோஜ் பாண்டியனை நீக்கிவிட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி ஆனால், இதை சபாநாயகர் அப்பாவு ஒப்புக்கொள்ளவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் அளித்துள்ள நிலையில், சபாநாயகர் இன்னும் தனது முடிவை தெளிவாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை கூட உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸை அதிமுகவிலிருந்து பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். அதேபோல, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகிய எம்.எல்.ஏக்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறிக்கவும் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.

சீட் பிரச்சினை
ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களின் சீட்களையும் மாற்ற வேண்டும் என்றும் சபாநாயகருக்கு கடிதம் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், ஓபிஎஸ்ஸும் இதுதொடர்பாக கடிதம் அளித்ததன் காரணமாக இதுவரை சபாநாயகர் அப்பாவு, எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான் வரும் அக்டோபர் 17ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால், இருக்கை விவகாரம் வெடித்துள்ளது.

எம்எல்ஏக்கள் கூட்டம்
அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள். இதற்கான மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி சமாளிப்பது
ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் முடிவை சபாநாயகர் எதிர்பார்த்து, ஓ.பன்னீர் செல்வத்தை பதவியில் இருந்து நீக்காமல் இருக்கும்பட்சத்தில், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகியோர் சட்டசபைக்கு வந்தால் அவரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நாளைய தினம் நடைபெற உள்ள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

புறக்கணிக்க முடிவு
சபாநாயகர் அப்பாவு, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமிக்காமல், ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டால், சட்டசபை கூட்டத்தொடரையே புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சட்டசபை கூட்டத்தொடரை ஒட்டுமொத்த அதிமுக எம்எல்ஏக்களும் புறக்கணிப்பதாக அறிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications