ஆஹா.. மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டோமே.. எடப்பாடியால் வந்த அவசரம் தானோ? இப்படி ஒன்னு இருக்கே
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற ஆறுக்குட்டியை சஸ்பெண்ட் செய்வது யார்
சென்னை: அதிமுகவில் உச்சக்கட்ட பிரச்சனைகள் வலுத்து வரும் நிலையில், அக்கட்சி தன்னுடைய பலத்தை இழந்து இன்று கையை பிசைந்து நிற்கிறது.. அதற்கு ஒரு உதாரணமும் நேற்றைய தினம் நடந்துள்ளது.
அவசர புத்தியாலும், அலட்சியப்போக்காலும், சட்டத்தின் நெறிமுறைகளை தவறவிட்டார் எடப்பாடி பழனிசாமி.. அந்த சட்டத்தின் ஓட்டைகள்தான், இன்று ஓபிஎஸ்ஸுக்கு பலமாகி கொண்டிருக்கின்றன.
அன்று பொதுக்குழு நடத்தியபோதே, சட்டப்படி அணுகினால், இவையெல்லாம் செல்லாது என்று, எடப்பாடி தரப்பினரிடம் அப்போதே சில நலன்விரும்பிகள் எச்சரித்தார்களாம்.. அப்படி இருந்தும், அந்த பேச்சை எடப்பாடி டீம் காதில் போட்டுக் கொள்ளவில்லையாம்.

நெருடல்கள்
அதுதான் இன்றைய தினம் வினையாக வந்து விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.. இன்னொன்றையும் நலன்விரும்பிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. ஹைகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன், 23ம் தேதி நடந்த பொதுக்குழு பற்றி பேசவே இல்லை, 16-ம் தேதி நடந்த பொதுக்குழு பற்றி மட்டுமே பேசியுள்ளார்.. ஒரு வருடத்துக்கு எத்தனை பொதுக்குழுவை கூட்டலாம்? என்று அடுத்தடுத்த நீதிமன்ற விசாரணைகளில் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.. அப்படி எழுப்பினால் அது கூடுதல் சட்டசிக்கலுக்கு எடப்பாடிக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.

இலை மேஜர்
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அரசியல் நோக்கர்கள் எச்சரித்து வருகிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் இவர்கள் 2 பேரும் கையெழுத்து போட்டால் மட்டுமே இரட்டை இலை கட்சிக்கு கிடைக்கும்.. கையெழுத்து போடாதபட்சத்தில், அந்த இலை தானாகவே முடங்கிவிடும்.. இலை மட்டுமல்ல, கட்சியும் முடங்கிவிடும் நிலை உள்ளது.. எடப்பாடி பழனிசாமிக்கு மெஜாரிட்டி என்பதை தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளாது.. அதை நீதிமன்றமும் கணக்கில் கொள்ளாது.. மாறாக, சட்டத்திற்கு உட்பட்டும், கட்சி விதிகளுக்கு உட்பட்டும் அனைத்தும் சரியாக நடந்துள்ளதா என்பதை மட்டுமே நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் உற்று கவனிக்கும். அந்த வகையில் எடப்பாடிக்கு இன்னொரு சிக்கல் எழ வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வைத்திலிங்கம்
அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்ட ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலும் தேவை.. அதேபோல, நிறைவேற்றப்படும் தீர்மானங்களிலும் இருவரின் ஒப்புதலும் இருந்தாக வேண்டும்.. அந்தவகையில், ஓபிஎஸ்ஸும்சரி, எடப்பாடியும் சரி, எப்படி இணைந்து செயல்பட போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.. 6 மாதமாக களப்பணியாற்றி, மெஜாரிட்டி அதிமுகவை இன்று தன்வசம் வைத்திருந்தாலும், "ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் எடப்பாடியால் ஒன்றும் செய்ய முடியாது" என்று வைத்திலிங்கமும் சொல்லி வருகிறார்.. இப்படி வருங்கால அதிமுகவின் தலையெழுத்து, இவர்களின் கையெழுத்தால் முடங்கும் நிலைமைக்கு ஆளாகி உள்ளது.

அதிகாரம் + பலம்
கட்சி எந்த அளவுக்கு முடங்கிப்போயுள்ளது என்பதற்கு ஒரு உதாரணமும் தற்போது நடந்துள்ளது.. நேற்றைய தினம், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைந்துள்ளார்.. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 3 முறை ஆறுகுட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இந்த கட்சி தாவல் நடந்துள்ளது என்றாலும், எடப்பாடிக்கு நேரடியாக செக் வைக்கும் வகையிலேயே ஆறுக்குட்டி, கொங்கு திமுகவால் தட்டி தூக்கப்பட்டுள்ளார்.

ஆறுக்குட்டி
இப்படி கட்சி மாறிய ஆறுக்குட்டியை, இப்போது யார் பதவியில் இருந்து நீக்குவது? ஆறுக்குட்டியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவது யார்? அதிமுகவில் அதிகாரம் படைத்தவர் யார்? என்ற சிக்கல் வந்துவிட்டது.. சசிகலாவுடன் போனில் பேசியவர்களையே, கட்சியில் இருந்து இரவோடு இரவாக தூக்கி அடித்தார் எடப்பாடி.. இந்த உத்தரவுக்கெல்லாம், வேறு வழியில்லாமலும் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸும் அப்போது கையெழுத்து போட்டு வந்தார்.. திமுகவுக்கு சென்றுவிட்ட நிலையில், இப்போது, ஆறுக்குட்டியை கட்சியில் இருந்து நீக்க போவது யார்?!












Click it and Unblock the Notifications