ஓபிஎஸ் தரப்பை குதூகலப்படுத்திய சி வோட்டர் எக்ஸிட் போல்... கொங்கு பிடியில் இருந்து விடுபடுமோ அதிமுக?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் ஒட்டுமொத்தமாக அதிமுக கவலை அடையச் செய்திருக்கிறது. ஆனாலும் ஓபிஎஸ் தரப்பை குறிப்பாக சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் கொண்டாட வைத்திருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
சட்டசபை தேர்தலில் அமமுகவை கூட்டணியில் சேர்த்தாக வேண்டும் என்பது ஓபிஎஸ் உட்பட தென்மாவட்ட அதிமுக தலைவர்களின் விருப்பம். ஆனால் இதனை முதல்வர் எடப்பாடி தலைமையிலான தரப்பு திட்டவட்டமாக நிராகரித்தது.
அத்துடன் வடதமிழகம், கொங்கு பெல்ட்டில் எளிதாக வெல்ல வேண்டும் என்பதற்காக பாமகவுடன் கூட்டணி அமைக்கும் வியூகத்தையும் எடப்பாடி தரப்பு கையில் எடுத்தது. அதேநேரத்தில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தென்மாவட்டம் கொந்தளிப்பை காட்டியது.

தென் தமிழகம் அதிமுக
இப்படி தென் தமிழகத்தில் அதிருப்தி உச்சகட்டமாக இருந்ததால் அப்பகுதியில் அதிமுக படுதோல்வி அடையக் கூடும் என்றே கூறப்பட்டது. இது எடப்பாடியார் தரப்பு திட்டமிட்டே செய்த வியூகம் என்றெல்லாம் கூட குற்றம்சாட்டப்பட்டது. இதனால் தேர்தலுக்குப் பின்னர் தென் தமிழக அதிமுக கலகக் குரல் எழுப்பும் என்றும் கூறப்பட்டது.

தலைகீழ் எக்ஸிட் போல்
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளும் கூட தென் தமிழகத்தில் அதிமுகவுக்கு அடி விழும் என்பதை கோட்டிட்டு காண்பித்தது. ஆனால் தற்போதைய எக்ஸிட் போல் முடிவுகளோ எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிறது. குறிப்பாக சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள் அதிமுகவில் பெரும் பிரளயத்துக்கே வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

கொங்கு பெல்ட்டில் பின்னடைவு
கொங்கு பெல்ட்டில் எப்படியும் கணிசமான இடங்களில் வெல்வோம் என்ற எடப்பாடி தரப்பின் நம்பிக்கையை இந்த எக்ஸிட் போல் வேட்டு வைத்து தகர்த்துவிட்டது. அதேநேரத்தில் தென் தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும் நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது இந்த எக்ஸிட் போல். அதாவது கொங்கு பெல்ட்டில் 17 முதல் 19 இடங்கள்தான் அதிமுகவுக்கு கிடைக்குமாம். ஆனால் தென் தமிழகத்தில் 21 முதல் 23 இடங்கள் அதிமுகவுகு சாத்தியமாம்.

ஓபிஎஸ் அணி உற்சாகம்
இதுதான் அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்ட தென் தமிழக அதிமுக தலைமைகளை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இந்த எக்ஸிட் போல் முடிவுகள் மட்டும் சரியாக இருந்துவிட்டால் அதிமுகவில் இனி நாம் வைத்ததுதான் எல்லாம் என்கிற கோதாவுடன் முழு ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்காம். இத்தனை நாள் கொங்கு பெல்ட் கோலோச்சியதை கண்டு குமுறிக் கொண்டிருந்த தென் தமிழ்நாடு அதிமுகவினர் இப்போது கொண்டாட்ட மனநிலைக்கு தயாராகிவிட்டனராம்.

ஓபிஎஸ் வசமாகும்?
சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகளைப் போல மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் இருந்தால் அதிமுகவின் எதிர்காலம் ஓபிஎஸ் தரப்பு வசமாகவே வாய்ப்புகள் அதிகம். அப்போது எடப்பாடி தரப்பு என்ன செய்யும், ஓபிஎஸ்-க்கு பாவமன்னிப்பு கொடுத்து சசிகலா அண்ட்கோ ரீ என்ட்ரி ஆகுமா? என்கிற பரபரப்பான எதிர்ப்பார்ப்புகள் இப்போதே மையம் கொண்டுவிட்டன.












Click it and Unblock the Notifications