பொங்கல் பரிசில் கரும்பு.. அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி.. ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் திருவண்ணாமலையில் அதிமுக விவசாய அணி சார்பில் ஜன.2ல் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு கரும்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட வேண்டும் என்று அதிமுகவினர் கடுமையாக வலியுறுத்தினர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக ரூ. 5,000 வழங்கவேண்டும் எனவும், முழு செங்கரும்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்த நிலையில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு ஒன்றையும் சேர்த்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதிமுகவின் வெற்றி
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது. கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி ஆகும்.அதிமுக விவசாய அணி சார்பாக ஜன.2ம் தேதியன்று திருவண்ணாமலையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது.

அதிமுக துணை நிற்கும்
இனி வரும் காலங்களில் திமுக அரசு மக்கள் நலனிலும், விவசாயிகள் நலனிலும் அக்கறை இல்லாமல் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் போது மக்களுக்கு ஆதரவாக அதிமுக என்றென்றும் துணை நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிமுகவினருக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications