சசிகலா ஆடியோ ரிலீஸ் நாடகம்... அதிமுகவில் தீர்மானம் - தொலைபேசியில் பேசிய அனைவரும் கூண்டோடு நீக்கம்
சசிகலா உடன் தொலைபேசியில் பேசி கட்சியின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்திய அனைவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: சசிகலா தொலைபேசியில் பேசுவதை தினந்தோறும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி நாடகம் ஆடி வருகிறார். சசிகலா உடன் பேசிய அனைவரையும் கட்சியையை விட்டே நீக்க வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலா உடன் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட அனைவருமே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகக் கூறினார். அந்த சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்களையும் வீட்டிற்கு அழைத்து சந்தித்தார் சசிகலா. சட்டசபைத் தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கடந்த மார்ச் மாதத்தில் அறிக்கை வெளியிட்டார்.
அடுத்த சில நாட்களிலேயே சசிகலா ஆன்மீக பயணம் கிளம்பினார். பல கோவில்களில் யாகங்கள், சிறப்பு பூஜைகள் செய்த சசிகலா சில மாதங்கள் ஒதுங்கியிருந்தார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 77 இடங்களை வென்றது. அதிமுக பிரதான எதிர்கட்சியாக சட்டசபையில் அமர்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சசிகலா தனது நாடகத்தை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாகவே பெயர் தெரியாத தொண்டர்களுடன் பேசி அந்த ஆடியோவை ரிலீஸ் செய்து வருகிறார். கட்சியை காப்பாற்ற நான் வருவேன் என்று சொன்னார்.

சசிகலா ஆடியோவிற்கு கண்டனம்
அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதே சசிகலாவின் ஆசை. அதற்காகவே கடந்த 3 மாதகாலமாக காய் நகர்த்தி வந்த அவர், ஆடியோவை ரிலீஸ் செய்வதன் மூலம் தனது சதுரங்க விளையாட்டை ஆரம்பித்துள்ளதாக ஜெயக்குமார் உள்ளிட்டோர் விமர்சனம் செய்தனர்.

அதிமுகவை பிரிக்க முடியாது
20க்கும் மேற்பட்டோரிடம் பேசி ஆடியோக்களை தினசரி ஒன்றாக ரிலீஸ் செய்த சசிகலா கடைசியாக பேசிய ஆடியோவில் அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது கூறினார். தான் பேசும் ஆடியோக்கள் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது சசிகலாவின் எண்ணம். ஆனால் சசிகலாவின் பேச்சை எல்லாம் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் சட்டை செய்ததாகவே தெரியவில்லை.

ஒழுங்கு நடவடிக்கை
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவோர் குறித்து எம்.எல்.ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர். அவர்களை உடனடியாக நீக்க கோரிக்கை இனி சசிகலாவுடன் பேசுவோர் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வினோதமான நாடகம்
தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக கூறிய சசிகலா இப்போது கட்சி வலுப்பெற்ற உடன் அபகரிக்க நினைக்கிறார். ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் ஒருவருடன் பேசுவதும் அதை ஊரறிய செய்வதுமாக வினோதமான நாடகத்தை அரங்கேற்றுகிறார் . உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகள். அவருடன் தொடர்பு வைத்திருப்போரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதிமுக தீர்மானம்
இதனையடுத்து கட்சியில் இருந்து கொண்டே சசிகலா உடன் பேசியவர்களை அதிமுகவை விட்டு நீக்க வேண்டும் என்று இன்றைய தினம் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடும்பத்தின் அபிலாஷை
மகத்தான இரு பெரும் தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவு படுத்துகிறோம்.

ஏகமனதாக தீர்மானம்
அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாற்றாகவும் எதிராகவும் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அதையும் மீறி பேசியவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எம்ஜிஆர், ஜெயலலிதா கனவு
அதிமுகவை கண்ணின் மணியென காப்போம். எம்ஜிஆர் கண்ட கனவை நனவாக்குவோம். எனக்குப் பின்னால் நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக மக்கள் தொண்டாற்றும் என்று ஜெயலலிதா சொன்னதை நிறைவோற்றுவோம் என உளமாற உறுதி ஏற்கிறோம் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியை விட்டு 15 பேர் நீக்கம்
இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் ஆனந்தன், சின்னசாமி உள்ளிட்ட 15 பேர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுடன் தொலைபேசிய காரணத்திற்காக இவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் சசிகலாவிற்கு அதிமுகவிற்கு ஒரு காலத்திலும் இடமில்லை என்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் உறுதியாக சொல்லியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications