அதிமுகவில் டிசம்பர் 5 திருப்புமுனையா? ஜெயலலிதா நினைவிடத்தில் சங்கமமாகும் சண்டை கோஷ்டிகள்?
சென்னை: ஜெயலலிதா நினைவுநாளாக அதிமுகவினர் அனுசரிக்கும் டிசம்பர் 5-ந் தேதியன்று அக்கட்சியின் பல கோஷ்டிகள் ஓரணியாக சங்கமிக்கும் சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி இணைந்து செயல்படுவதில் இணக்கம் காட்டி இருக்கின்றன. இந்த அணிகளுக்கு டிடிவி தினகரனும் வெள்ளைக் கொடி காட்டி இருக்கிறார்.
அதிமுகவைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி கோஷ்டி தனி ஆவர்த்தனம்தான் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. இத்தனைக்கும் எடப்பாடி கோஷ்டியின் பல சீனியர்கள் கூட இந்த தனி ஆவர்த்தனத்தை ரசிக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு தைரியத்தில் எடப்பாடி பழனிசாமி இப்படியான தனி ஆவர்த்தன முடிவில் திட்டவட்டமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாஜகவின் ப்ளான்
இன்னொரு பக்கம், அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளையும் ஓரணியில் சேர்த்துவிடுவதில் பாஜக துடியாய் துடிக்கிறது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் தாங்கள் வெல்ல முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறது பாஜக. இதற்காகவே அதிமுகவை ஒருங்கிணைப்பதில் மும்முரமாக இருக்கிறது பாஜக.

எது ஜெ. நினைவுநாள்?
இந்த நிலையில் அதிமுக கோஷ்டிகளை ஒருங்கிணைக்க 2 நாட்களை குறித்து வைத்திருக்கிறது பாஜக. ஒன்று டிசம்பர் 5-ந் தேதி; மற்றொன்று ஜனவரி 17. டிசம்பர் 5-ந் தேதிதான் ஜெயலலிதாவின் நினைவு நாள் என்று கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவினர் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆறுமுகசாமி ஆணையமானது டிசம்பர் 4-ந் தேதியே ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாக குண்டை தூக்கிப் போட்டதால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி டீம் ப்ளான்
ஆனால் இந்த குழப்பத்தை எடப்பாடி பழனிசாமி அணி பொருட்படுத்தவில்லை. டிசம்பர் 5-ந் தேதிதான் ஜெயலலிதாவின் நினைவுநாள்; அன்றைய தினம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்துவர் என எடப்பாடி பழனிசாமி அணி அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜரூராகவும் எடப்பாடி கோஷ்டி மேற்கொண்டு வருகிறது.

ஓரணியில் சசிகலா, ஓபிஎஸ்?
மற்ற கோஷ்டிகளான ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அணியினரும் டிசம்பர் 5-ந் தேதியே ஜெயலலிதா நினைவு தினம் என அனுசரிக்கின்றனர். இதற்காக ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல இருக்கின்றனர். அப்படி செல்லும் இந்த 3 கோஷ்டி தலைவர்களையும் ஒன்று சேர்த்து வைத்துவிட முடியும் என நம்புகிறது பாஜக. ஆகையால் டிசம்பர் 5-ந் தேதியன்று மூன்று அதிமுக கோஷ்டிகளையும் ஜெயலலிதா நினைவிடத்தில் சங்கமிக்க வைத்துவிடலாம் என கணக்குப் போட்டு அதற்கான தீவிரமான முயற்சிகளையும் பாஜகவினர் மேற்கொள்கின்றனராம். இப்போதைக்கு க்ரீன் சிக்னல் கிடைத்தாலும் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் எனவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications