பழைய பழனிசாமினு நினைச்சீங்களா? மேடையில் முழங்கிய எடப்பாடி! முரட்டுத்தனமாய் தூங்கிய முனுசாமி & கோ.!
சென்னை : ரத்தக் களரியான அதிமுக அலுவலகம், போர்க்களமான பொதுக்கூட்டம் என நேற்றைய தினம் அதிமுக வரலாற்றில் மறக்க முடியாத தினமாக அமைந்த நிலையில் என்னை பழைய பழனிச்சாமியின் நினைச்சீங்களா என மேடையில் எடப்பாடி பழனிச்சாமி கொந்தளித்துக் கொண்டிருக்க கே.பி.முனுசாமி ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தூங்கி வழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக அதிமுகவில் நீருபூத்த நெருப்பாக இருந்த அதிகாரப்போட்டி ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் அதிமுகவுக்குள் நிறைவேற்றப்பட்ட அரசியல் நாடகத்தின் காட்சிகள் ஏராளம்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதிலிருந்து கட்சியில் அதிகாரமிக்கவர் யார் என்ற போட்டி ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே எழுந்தது.

அதிமுக பொதுக்குழு
இந்த காலத்தில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் விளைவுதான் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளுக்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி இருப்பது ஏற்கனவே வேறு சிலரும் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்திருந்தாலும் மிகவும் அறியப்பட்ட முகங்களாக எம்ஜிஆர் ஜெயலலிதா தான் இருந்து வந்தனர். அதன் பிறகு சசிகலா சிறிது காலம் பணியாற்றினாலும் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஜெயலிதாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த ஓபிஎஸ் அதிமுகவின் மிகப்பெரிய பொறுப்புக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தொண்டர்களிடையே மோதல்
இருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.. தர்ம யுத்தத்தின் போது எடப்பாடி பழனிச்சாமியே எதிர்பார்க்காத அளவுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு அதிகமாக இருந்தது பின்னர் அவரது செயல்பாடுகள் காரணமாக அது சரிவடைந்து தற்போது ஐந்தே ஐந்து மாவட்ட செயலாளர்கள் ஆதரவில் வந்து நிற்கிறது. நேற்று நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று கொண்ட போதிலும் மறுபுறம் அதிமுகவின் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஏராளமான ஆவணங்களை அள்ளி சென்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட போது மேடையில் மிகவும் ஆவேசமாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் குறித்து அதிகமாக பேசாத நிலையில் தமிழக முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் என்னை பழைய பழனிச்சாமி என நினைத்தீர்களா என மிகவும் ஆவேசமாக பேசினார். அதிமுகவை அழிக்கலாம் என நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என மிகவும் கொந்தளிப்புடன் பேசிக் கொண்டிருந்தார்.

முரட்டு தூக்கம்
இப்படி எடப்பாடி பழனிச்சாமி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்க மேடையில் அமைந்திருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தூங்கி வழிந்தனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களான கேபி முனுசாமி, ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், மேடையின் கீழே அமர்ந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களும் முரட்டுத்தனமாய் தூங்கிக் கொண்டிருந்தனர். மேலும் கட்டுப்படுத்த முடியாமல் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தடபுடல் விருந்து வைக்கப்பட்ட நிலையில் அதன் காரணமாக யாரும் தூங்கவில்லை எனவும் நீண்ட நாட்களாக கட்சிக்காக கடுமையாக உழைத்ததால் அசதியில் தூங்கி இருக்கலாம் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications