அவ்வளவு பேசிய சரத்குமாருக்கு கடைசியில் ஒன்னே ஒன்னுதானா?.. அப்ப ராதிகா கதி??
சென்னை: ஒன்றிரண்டு தொகுதி கொடுத்தால் கூட்டணிக்கு வரமாட்டோம் என சரத்குமார் கூறியிருந்த நிலையில் தற்போது வெளியான உத்தேச பட்டியலை பார்த்தால் அவரது கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சிக்கு இரு இடங்களை ஜெயலலிதா ஒதுக்கினார். மேலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என கறார் காட்டினார்.
அதன்படி சரத்குமார் உள்பட இருவர் போட்டியிட்டு வென்றனர். கடந்த 2016-ஆம் ஆண்டு அவரது கட்சிக்கு ஓரிரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அவர் தோல்வியடைந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என கூறி வந்தார்.
தனி சின்னம்
அதே நேரத்தில் ஒன்று இரண்டு சீட்டுகளுக்கெல்லாம் நாங்கள் கூட்டணி வைக்க தயாராக இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என தெரிவித்திருந்தார்.
தொகுதி பங்கீடு
மேலும் கணவர் சரத்திற்கு அரசியலில் உதவி செய்ய, ராதிகா வெற்றிகரமாக கோலோச்சி கொண்டிருந்த சின்னத்திரையை விட்டு விலகினார். இவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என சரத்குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து ஒரு பட்டியல் இணையத்தில் உலா வருகிறது.
அதிமுக கூட்டணி
இதில் 171 இடங்களில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரே ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது திருவொற்றியூர் தொகுதியில் சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராதிகாவுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.
சசிகலா
எனவே சரத்குமார் இந்த ஆஃபரை ஏற்க மாட்டார் என்றே தெரிகிறது. இதனால் அமமுக கூட்டணிக்கு சென்றாலும் செல்லலாம். சசிகலா தலைமையில் 3ஆவது அணி அமையும் பட்சத்தில் அந்த அணியில் இணைந்து கணிசமான தொகுதிகளை பெற்ற சரத்குமார் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.