கொங்கு ஈஸ்வரன் சொன்னது நடந்துருமோ?அதிமுகவுக்கு 117 தொகுதி மட்டும்தானா.. கூட்டணிக் கட்சிகளுக்கு 117?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டால் அதிமுக 117 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இதன்மூலம் அதிமுக தனிப்பெரும் கட்சியான வெல்லவே முடியாத ஒரு நெருக்கடியான சூழ்நிலையை பாஜக உருவாக்க உள்ளது.
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலில் அதிமுக,பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகியவை கூட்டணி அமைத்திருந்தன.
திமுக அணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. தற்போதைய நிலையில் சட்டசபை தேர்தலுக்கும் இதே கூட்டணிகளே தொடரும் நிலை உள்ளது.
படார்னு பாயை சுருட்டிக் கொண்டு கிளம்பிய ரஜினி.. சுருட்டி வாரிப் போட்ட பாஜக.. அப்ப பாமக கதி?!
60 இடங்கள் கேட்கும் பாஜக
அதிமுக கூட்டணியில் பாஜக 60 இடங்களை கேட்டு வருகிறது. பாஜகவுக்கு நிச்சயம் அதிமுக 60 தொகுதிகளை ஒதுக்காது. அதிகபட்சமாக 30 தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்க முன்வரலாம். அப்படி பாஜகவுக்கு 30 இடங்கள் கொடுக்கப்பட்டால் பாமகவும், தேமுதிகவும் அந்த கட்சியைவிட குறைந்தபட்சம் 5 தொகுதிகளையாவது கூடுதலாக கேட்கும்.
கூட்டணிக்கு 117 தொகுதிகள்
இதன்படிபார்த்தால் பாஜக 30, பாமக 35, தேமுதிக 35, தமாகா- 10, இதர சிறு கட்சிகள் 7 என கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் அதிமுக 117 தொகுதிகளை ஒதுக்க நேரிடும். அதிமுகவால் 117 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிட முடியும். இப்படியான ஒரு பார்முலாவைத்தான் பாஜக முன்வைத்து அதிமுகவை நெருக்கடி கொடுத்து வருவதாக கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நேற்று அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியும் இருந்தார்.
அதிமுகவுக்கு 117 தொகுதிகள்
தமிழக சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 118 இடங்கள். ஆனால் அதிமுக போட்டியிடுவதோ 117 தொகுதிகளில்தான் என்கிற நிலை உருவானால் அந்த கட்சி தனிப்பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி என்ற சரித்திரத்தை இழந்துவிடும். ஒருவேளை அதிமுக கணிசமான இடங்களில் வென்றாலும் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தயவில்தான் கூட்டணி ஆட்சி அமைக்கவும் முடியும் என்ற நெருக்கடி வரும். அதாவது பீகாரில் பாஜக என்ன பார்முலாவை அமுல்படுத்தியதோ அதையே தமிழகத்தில் திணிக்கப் பார்க்கிறது.
பாஜகவின் கூட்டணி ஆட்சி கணக்கு
அதிமுகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியாது என்பதால் கூட்டணி ஆட்சி, துணை முதல்வர்கள் பதவி என்ற வகையில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கேற்க முடியும் என்பது பாஜகவின் கணக்கு. அதிமுகவின் தொகுதிகளை குறைத்து போட்டியிட வைப்பதன் மூலம் அந்த கட்சியின் எதிர்காலத்தையே இல்லாமல் போகச் செய்வது என்பது பாஜகவின் மறைமுக நீண்டகால செயல்திட்டம். பீகாரில் கூட்டணியில் இருந்து கொண்டே ஜேடியூவை எப்படி செல்வாக்கு இழக்கச் செய்ததோ அதே தந்திரத்தை அதிமுக மீது செயல்படுத்த விரும்புகிறது பாஜக.
அதிமுகவுக்கு நெருக்கடி
பாஜகவின் இந்த செயல்திட்டத்தை அதிமுகவால் தட்டிக் கழிக்க முடியாது என்பதையே அரசு விழாவில் கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட நெருக்கடியின் மூலம் புரிந்து கொள்ளவும் முடியும். கோவையில் நேற்று வேல்யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும், இந்த முறை கோவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு செல்வது உறுதி என பிரகடனம் செய்தார். நாம் ஏற்கனவே சொன்னதைப் போல கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிமுக வெல்லக் கூடிய தொகுதிகளை பாஜக நிர்பந்தித்து பெற்று தமிழகத்தில் தங்களுக்கு பலம் இருக்கிறது என காட்ட எல்லாவிதமான நெருக்கடிகளையும் தரத்தான் போகிறது.
பாஜகவாக உருமாறும் அதிமுக?
பாஜகவின் ஒவ்வொரு நகர்வுக்கும் அதிமுக இசைந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் சென்னையில் அமித்ஷா வருகையின் போது பாஜக தொண்டர்களைப் போல அதிமுக தொண்டர்கள் கொடி பிடித்த நிகழ்வு தமிழகம் முழுவதும் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. திரிபுராவில் காங்கிரஸ் கட்சியினரும் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும் எப்படி காவி கொடியை பிடித்து பாரத் மாதா கீ ஜே என முழக்கமிடுகிறார்களோ அதேபோல தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் பாஜக கொடியை கைகளில் ஏந்தும் சூழ்நிலை வெகுவிரைவாகவே உருவாகலாம் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து. உண்மையிலேயே இதுபோல் நிகழ்ந்தால் அதிமுகவைப் பொறுத்தவரை தற்கொலை முடிவாக இருக்கும் என்கிற அச்சம் அதிமுக தொண்டர்களிடையே எழுந்திருக்கிறது.